YouVersion Logo
Search Icon

1 இராஜா 19

19
அத்தியாயம் 19
எலியா ஓரேபுக்கு ஓடிப்போதல்
1எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். 2அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய உயிருக்கும் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்த நேரத்தில் உன்னுடைய உயிருக்குச் செய்யாமற்போனால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள். 3அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான். 4அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி, 5ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான். 6அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான். 7யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான். 8அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான்.
யெகோவா எலியாவுக்குக் காட்சியளித்தல்
9அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார். 10அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான். 11அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை. 12பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது. 13அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது. 14அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான். 15அப்பொழுது யெகோவா அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாக வனாந்திரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, 16பின்பு நிம்சியின் மகனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, ஆபேல் மெகொலா ஊரானான சாப்பாத்தின் மகனாகிய எலிசாவை உன்னுடைய இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்செய். 17சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான். 18ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
எலிசாவின் அழைப்பு
19அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் 12 ஆம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான். 20அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்திரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான். 21அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரங்களால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து மக்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிறகு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்னேசென்று அவனுக்கு பணிவிடைசெய்தான்.

Currently Selected:

1 இராஜா 19: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 1 இராஜா 19