YouVersion Logo
Search Icon

1 சாமு 27

27
அத்தியாயம் 27
பெலிஸ்தர்களோடு தாவீது
1பின்பு தாவீது: நான் எந்த நாளிலாவது ஒரு நாள் சவுலின் கையினால் அழிந்து போவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை இல்லாமல்போகும்படியும், நான் அவனுடைய கைக்கு நீங்கியிருக்கும்படியும், நான் பெலிஸ்தர்களின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதை விட நலமான காரியம் வேறில்லை என்று தன்னுடைய இருதயத்தில் யோசித்தான். 2ஆகையால் தாவீது தன்னோடு இருந்த 600 பேரோடு எழுந்து, மாயோகின் மகனான ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான். 3அங்கே தாவீதும், அவனுடைய மனிதர்களும், அவரவர் வீட்டாரும், தாவீதோடு அவனுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலும், காத் பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள். 4தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை. 5தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் தங்கும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம்முடைய அடியான் உம்மோடு இராஜரீக பட்டணத்திலே ஏன் தங்கவேண்டும் என்றான். 6அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்த நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது. 7தாவீது பெலிஸ்தர்களின் நாட்டிலே ஒரு வருடமும் நான்கு மாதங்களும் குடியிருந்தான்.
ஆகீஸை தாவீது ஏமாற்றுதல்
8அங்கேயிருந்து தாவீதும் அவனுடைய மனிதர்களும் கெசூரியர்கள் மேலும் கெஸ்ரியர்கள்மேலும் அமலேக்கியர்கள்மேலும் படையெடுத்துப் போனார்கள்; சூருக்குப் போகிற எல்லை தொடங்கி எகிப்து தேசம் வரை இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் தொடங்கி குடியிருந்தவர்கள் இவர்களே. 9தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, ஆண்களையும் பெண்களையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பி வருவான். 10இன்று எந்த திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தெற்கு திசையிலும், யெராமியேலர்களுடைய தெற்கு திசையிலும் கேனியருடைய தெற்கு திசையிலும் என்பான். 11இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கும்படி ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடி, ஒரு ஆணையாவது பெண்ணையாவது உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தர்களின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டுவந்தான். 12ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய மக்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றென்றும் அவன் என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.

Currently Selected:

1 சாமு 27: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in