ஆமோ 2
2
அத்தியாயம் 2
இஸ்ரவேலின்மீது நியாயத்தீர்ப்பு
1யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே. 2மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். 3நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 4மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. 5யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். 6மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்திற்கும், எளியவனை ஒரு ஜோடி காலணிகளுக்கும் விற்றுப்போட்டார்களே. 7அவர்கள் தரித்திரர்களுடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என்னுடைய பரிசுத்த நாமத்தைக் கெடுக்கும்படி மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் உறவுகொள்ளுகிறார்கள். 8அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 9நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாக இருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு, 10நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கைப்பற்றும்படி உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்து, உங்களை நாற்பது வருடங்களாக வனாந்திரத்திலே வழிநடத்தி, 11உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று யெகோவா கேட்கிறார். 12நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள். 13இதோ, கோதுமைக்கட்டுகள் பாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் நெருக்குகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற இடத்தில் நெருக்குவேன். 14அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பலசாலி தன் உயிரை காப்பாற்றுவதுமில்லை. 15வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன்னுடைய கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதுமில்லை. 16பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று யெகோவா சொல்லுகிறார்.
Currently Selected:
ஆமோ 2: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.