YouVersion Logo
Search Icon

தானி 11

11
அத்தியாயம் 11
தெற்கு மற்றும் வடக்கு ராஜாக்கள்
1மேதியனாகிய தரியு ஆட்சிசெய்த முதலாம் வருடத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன். 2இப்போது நான் உண்மையான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதற்குப்பின்பு நான்காம் ராஜாவாயிருப்பவன் எல்லோரிலும் மிக செல்வச்செழிப்புள்ளவனாகி, அதனால் அவன் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்ஜியத்திற்கு விரோதமாக எல்லோரையும் எழுப்பிவிடுவான். 3ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, வல்லமையோடு ஆட்சிசெய்து, தனக்கு விருப்பமானபடி செய்வான். 4அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்ஜியம் உடைந்துபோய், வானத்தின் நான்கு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத மற்றவர்களிடமாகக் கொடுக்கப்படும். 5தெற்கு திசை ராஜா#11:5 எகிப்தின் ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைவிட பலவானாகி ஆட்சிசெய்வான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும். 6அவர்கள் சில வருடங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்செய்யும்படிக்குத் தெற்கு திசை ராஜாவின் மகள் வடக்குதிசை ராஜாவினிடத்தில்#11:6 சீரியாவின் ராஜா வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இல்லாமற்போகும்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். 7ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் இடத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடக்குதிசை ராஜாவின் பாதுகாப்பிற்குள் நுழைந்து, அவர்களை விரோதித்து, 8அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்திற்குக் கொண்டுபோய், சில வருடங்கள்வரை வடக்குதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாக நிற்பான். 9தெற்கு திசை ராஜா அவன் ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வந்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான். 10ஆனாலும் அவனுடைய மகன்கள் போரிட முயற்சித்து, திரளான படைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாக வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய பாதுகாப்புவரை போரிட்டு சேருவான். 11அப்பொழுது தெற்கு திசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடக்குதிசை ராஜாவோடே போரிடுவான்; இவன் பெரிய படையை ஏகமாக நிறுத்துவான்; ஆனாலும் இந்தப் படை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படும். 12அவன் இந்தப் படையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை கொல்வான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான். 13சில வருடங்கள் சென்றபின்பு வடக்குதிசை ராஜா திரும்ப முந்தின படையிலும் பெரிதான படையைச் சேர்த்து, மகா பெரிய படையோடும் திரளான செல்வத்தோடும் நிச்சயமாக வருவான். 14அக்காலங்களில் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் மக்களிலுள்ள#11:14தானியேலின் சொந்த ஜனங்கள் கலகக்காரர்கள் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள். 15வடக்குதிசை ராஜா வந்து, கோட்டைமதில்களைக் கட்டி, பாதுகாப்பான நகரங்களைப் பிடிப்பான்; தெற்கு திசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட மக்களும் நிலைநிற்காமல்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இருக்காது. 16ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் விருப்பப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் அழகான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும். 17தன் ராஜ்ஜியத்தின் முழுவல்லமையோடு தானும் தன்னோடேகூட படைவீரர்களும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதல் ஏற்படும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே பலப்படமாட்டான்; அவள் அவன் சார்பில் நிற்கமாட்டாள். 18பின்பு இவன் தன் முகத்தைத் மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேக தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியச்செய்வதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான். 19ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் கோட்டைகளுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான். 20செழிப்பான ராஜ்ஜியத்தில் வரிவசூலிப்பவனைத் திரியச்செய்கிற ஒருவன் தன் இடத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாட்களுக்குள் கோபமில்லாமலும் சண்டையில்லாமலும் நாசமடைவான். 21அவன் இடத்தில், அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்ஜியபாரத்தின் மேன்மையைக் கொடுக்காதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாக நுழைந்து, ஆசைவார்த்தை பேசி, ராஜ்ஜியத்தைப் பிடித்துக்கொள்வான். 22வேகமாக வருகிற படைகள் இவனாலே வேகமாக முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும்#11:22 யூதர்களின் பிராதான ஆசாரியன். முறிக்கப்படுவான். 23ஏனென்றால் அவனோடே சம்பந்தம்செய்த நாட்கள்முதல் அவன் தந்திரமாக நடந்து, கொஞ்சம் மக்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்வான். 24தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கும்போது, அவன் உட்பிரவேசித்து, தன் முன்னோர்களும் தன் முன்னோர்களின் முன்னோர்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, கோட்டைகளுக்கு விரோதமாகத் தனக்குள் சூழ்ச்சிகளை யோசிப்பான்; சிலகாலம்வரை இப்படியிருக்கும். 25பின்னும் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாகப் பெரிய படையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் பெலத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தெற்கு திசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் போரிடுவான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் தீய ஆலோசனை செய்திருந்தபடியால், அவன் நிற்கமாட்டான். 26அவனுடைய உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் வேகமாக வரும்; அநேகர் கொலைசெய்யப்பட்டு விழுவார்கள். 27இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்திற்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். 28அவன் திரளான செல்வத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான். 29குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடத்தை முன்நடத்தையைப்போல் இருக்காது. 30அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனவேதனையடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபம்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான். 31ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட படைகள் எழும்பி, பாதுகாப்பான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அனுதினபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள். 32உடன்படிக்கைக்குத் துரோகிகளாக இருக்கிறவர்களை முகதாட்சணியம்செய்து வஞ்சக மார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற மக்கள் திடன்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். 33மக்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாட்கள்வரை பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள். 34இப்படி அவர்கள் விழும்போது கொஞ்சம் ஒத்தாசையால் உதவிபெறுவார்கள்; அப்பொழுது அநேகர் முகதாட்சணியம்செய்து அவர்களை ஒட்டிக்கொள்வார்கள். 35அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலம்வரை இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாட்கள் செல்லும்.
தன்னைத்தான் உயர்த்தின ராஜா
36ராஜா தனக்கு விருப்பமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீரும்வரை அவனுக்குக் கைகூடிவரும்; தீர்மானிக்கப்பட்டது நடந்தேறும். 37அவன் தன் முன்னோர்களின் தெய்வங்களை மதிக்காமலும், பெண்களின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதிக்காமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி, 38பாதுகாப்புகளின் தேவனைத் தன் இடத்திலே கனப்படுத்தி, தன் முற்பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், விலையுயர்ந்த பொருட்களினாலும் கனப்படுத்துவான். 39அவன் பாதுகாப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தெய்வங்களுக்காகவும் செய்வது என்னவென்றால், #11:39 தன் கோட்டையை, அரண்மனையைக் காக்க அந்நிய தேவர்களை வணங்கும் ஜனங்களுடைய உதவியை நாடுவான்அவைகளை மதிக்கிறவர்களை மிகவும் கனப்படுத்தி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் பணத்திற்காகப் பங்கிடுவான். 40முடிவு காலத்திலோ வென்றால், தெற்குதிசை ராஜா அவனுக்கு எதிர்த்து நிற்பான்; வடக்குதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் திரளான கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாக வருவான்; அவன் தேசங்களுக்குள் நுழைந்து, அவைகளை நெடுகக் கடந்து போவான். 41அவன் அழகான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் மக்களில் முக்கியமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள். 42அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை. 43எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான செல்வங்களையும் விலையுயர்ந்த எல்லா பொருட்களையும் ஆண்டுகொள்ளுவான்; லிபியர்களும் எத்தியோப்பியர்களும் அவனுக்குப் பின்செல்லுவார்கள். 44ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும்; அப்பொழுது அவன் அநேகரை கொடூரமாக அழிக்க மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், 45மத்திய தரைக் கடல் சமுத்திரங்களுக்கு, இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையின் அருகில் தன் அரண்மனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசைசெய்பவர் இல்லாமல், அவன் முடிவடைவான்.

Currently Selected:

தானி 11: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in