நியா 10
10
அத்தியாயம் 10
நியாயாதிபதியாகிய தோலா
1அபிமெலேக்குக்கு இறந்தப் பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான். 2அவன் இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம் செய்யப்பட்டான்.
நியாயாதிபதியாகிய யாவீர்
3தோலா இறந்தப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை 22 வருடங்கள் நியாயம் விசாரித்தான். 4முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது. 5யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
அம்மோனியர் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிடுதல்
6இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள். 7அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார். 8அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள். 9அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள். 10அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள். 11யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும், 12சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா? 13அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன். 14நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார். 15இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி, 16அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
யெப்தா தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
17அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். 18அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
Currently Selected:
நியா 10: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.