YouVersion Logo
Search Icon

யோபு 22

22
அத்தியாயம் 22
எலிப்பாஸின் வார்த்தைகள்
1அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
2“ஒரு மனிதன் விவேகியாயிருந்து,
தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?
3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ?
நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது
அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
4அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி,
உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
5உம்முடைய பொல்லாப்பு பெரியதும்,
உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி,
ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
7மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும்,
பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது;
கனவான் அதில் குடியேறினான்.
9விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்;
தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது;
திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
11நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது,
பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ?
நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
13நீர்: தேவன் எப்படி அறிவார்,
இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
14அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது;
வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
15அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
16காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்;
அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும்,
அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும்,
சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
19எங்கள் நிலைமை அழியாமல்,
அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
21நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்;
அதினால் உமக்கு நன்மைவரும்.
22அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு,
அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
23நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால்,
திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும்,
ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
26அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்;
அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
28நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்;
உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
29மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல,
தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
30குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்;
உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.

Currently Selected:

யோபு 22: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in