YouVersion Logo
Search Icon

சங் 66

66
சங்கீதம் 66
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.
1பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக்
கெம்பீரமாகப் பாடுங்கள்.
2அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி,
அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
3தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்;
உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள்
உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
4பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்;
அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
5தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்;
அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.
6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்;
ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்;
அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.
7அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;
அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது;
துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)
8மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.
9அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல்,
நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.
10தேவனே, எங்களைச் சோதித்தீர்;
வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
11எங்களை வலையில் அகப்படுத்தி,
எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
12மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்;
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்;
செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
13சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;
14என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து,
என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை
உமக்குச் செலுத்துவேன்.
15ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்;
காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்;
அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
17அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன்,
என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
18என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால்,
ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.
19மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார்,
என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
20என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும்,
தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும்
இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.

Currently Selected:

சங் 66: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in