உன் 8
8
அத்தியாயம் 8
1ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால்,
நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்;
என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
2நான் உம்மைக் கூட்டிக்கொண்டு,
என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்;
நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும்,
என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
3அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும்,
அவருடைய வலதுகை என்னை அணைக்கும்.
4எருசலேமின் இளம்பெண்களே!
எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க
உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
அன்பு புதுப்பிக்கப்படுதல்
மணவாளியின் தோழிகள்
5தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு
வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?
மணவாளி
கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்;
அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்;
அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
6நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,
உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;
நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.
7திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,
வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது;
ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும்,
அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும்#8:7 அவன் முற்றிலும் அசட்டைசெய்யப்படும்.
மணவாளியின் சகோதரன்
8நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,
அவளுக்கு மார்பகங்கள் இல்லை;
நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
9அவள் ஒரு மதிலானால்,
அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்;
அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
மணவாளி
10நான் மதில்தான்,
என் மார்பகங்கள் கோபுரங்கள்;
அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன்.
மணவாளன்
11பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,
அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக,
ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக்#8:11 கிராம வேலைக்காரனின் ஒரு நாள் கூலி கொண்டுவரும்படி விட்டார்.
12என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது;
சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும்,
அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
13தோட்டங்களில் குடியிருக்கிறவளே!
தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்;
நானும் அதைக் கேட்கட்டும்.
மணவாளி
14என் நேசரே! விரைவாக வாரும்,
கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள
வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.
Currently Selected:
உன் 8: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.