YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 19

19
சவுல் தாவீதைக் கொல்ல முயற்சித்தல்
1தாவீதைக் கொலை செய்யுங்கள் என்று சவுல் யோனத்தானுக்கும், தன் எல்லா பணியாட்களுக்கும் சொன்னான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகம் விரும்பினான். 2அதனால் யோனத்தான் அவனை எச்சரித்துச் சொன்னதாவது: “எனது தகப்பன் சவுல் உன்னைக் கொலைசெய்யச் சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் நாளை காலை எச்சரிக்கையாயிருந்து, இரகசியமான ஒரு இடத்தில் ஒளிந்து மறைந்திரு. 3நான் வெளியே போய் நீ ஒளிந்திருக்கும் வயல்வெளியில் என் தகப்பனாருடன் உனக்காக பேசுவேன். அதன்பின் நான் அறிந்ததை உனக்குச் சொல்வேன்” என்றான்.
4இவ்விதமாய் யோனத்தான் தன் தகப்பன் சவுலிடம் தாவீதைப் பற்றி நன்றாய்ப் பேசி அவனிடம், “அரசன் தமது ஊழியன் தாவீதுக்கு ஒரு தீமையும் செய்யாமல் இருக்கவேண்டும். அவன் உங்களுக்குத் தீமை செய்யவில்லை. அவன் செய்திருப்பது உங்களுக்கு அதிக நன்மையே கொடுத்திருக்கிறது. 5அவன் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனைக் கொன்றானே. இதனால் யெகோவா இஸ்ரயேலருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். நீங்களும் அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தீர்கள். அப்படியிருக்க ஏன் தாவீதைப்போல் குற்றமற்ற ஒருவனைக் காரணமில்லாமல் கொலைசெய்து ஒரு தீமையை செய்யவேண்டும்” என்றான்.
6சவுல் யோனத்தான் சொன்னதைக் கேட்டு, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், தாவீதும் கொல்லப்படுவதில்லை என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான்.
7அதன்பின் யோனத்தான் தாவீதை அழைத்து, தான் தனது தகப்பனுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லி, அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். அவன் முன்போலவே சவுலுடன் இருந்தான்.
8மறுபடியும் யுத்தம் மூண்டது. தாவீது போய் பெலிஸ்தியருடன் சண்டையிட்டு அவன் அதிக பெலத்துடன் அவர்களைத் தாக்கினான். அவர்கள் அவனுக்கு முன் நிற்காது தப்பி ஓடினார்கள்.
9ஒரு நாள் சவுல் தன் வீட்டில் இருந்தபோது, யெகோவாவிடமிருந்து வந்த பொல்லாத ஆவி அவன்மேல் இறங்கியது. அப்பொழுது தாவீது தன் யாழை வாசித்துக்கொண்டிருந்தான். 10அவ்வேளையில் சவுல் தன் கையிலிருந்த ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றான். ஆனால் தாவீது விலகிக்கொண்டதால், ஈட்டி சுவரில் பாய்ந்தது. தாவீது அன்றிரவு தப்பி ஓடிவிட்டான்.
11அதன்பின், சவுல் தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவனை மறுநாள் அதிகாலையில் கொலை செய்யும்படி, அவன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். இதை அறிந்த அவன் மனைவி மீகாள் தாவீதிடம், “இன்றிரவு உமது உயிருக்காகத் தப்பி ஓடாவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்” என்று எச்சரித்தாள். 12எனவே மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட அவன் தப்பி ஓடினான். 13பின்பு மீகாள் ஒரு விக்கிரகத்தை எடுத்து அவனுடைய கட்டிலின்மேல் வைத்து, ஒரு போர்வையால் மூடி வெள்ளாட்டு மயிரைத் தலைமாட்டில் வைத்தாள்.
14தாவீதைப் பிடித்து வரும்படி சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது அவன் வியாதியாய் இருப்பதாக மீகாள் சொன்னாள்.
15திரும்பவும் தாவீதைப் பார்ப்பதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பி, “அவனைக் கொலை செய்யும்படி கட்டிலோடு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். 16அந்த மனிதர் அவனுடைய வீட்டுக்குள் வந்தபோது, அவனுடைய கட்டிலின்மேல் ஒரு விக்கிரகமும் அதன் தலையில் ஒரு வெள்ளாட்டு மயிர்த்தோலும் இருப்பதைக் கண்டார்கள்.
17அப்பொழுது சவுல் மீகாளிடம், “என்னை ஏமாற்றி என் பகைவனை ஏன் இப்படி தப்பவைத்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு மீகாள், “தாவீது என்னிடம், என்னைத் தப்பிப் போகவிடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று சொன்னான்” என்றாள்.
18இவ்விதமாய்த் தாவீது தப்பி ஓடி ராமாவிலிருந்த சாமுயேலிடம் போய் சவுல் தனக்குச் செய்தவற்றையெல்லாம் சொன்னான். அதன்பின் அவனும் சாமுயேலும் நாயோத்திற்குப் போய் அங்கே தங்கியிருந்தார்கள். 19அப்பொழுது தாவீது ராமாவிலுள்ள நாயோதிலே தங்கியிருக்கிறான் என்பதைச் சவுல் கேள்விப்பட்டான். 20எனவே சவுல் தாவீதைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன் மனிதரை அனுப்பினான். அவர்கள் அங்கே இறைவாக்கு உரைப்போர் கூட்டத்தையும், அவர்களுக்குத் தலைவனாக சாமுயேல் நிற்பதையும் கண்டார்கள். அப்போது சவுலின் ஆட்கள் மேலும் யெகோவாவின் ஆவியானவர் இறங்கினார். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள். 21இதைப்பற்றிச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது வேறு மனிதரை அனுப்பினான். அவர்களும் அவ்வாறே இறைவாக்கு உரைத்தார்கள். மூன்றாம் முறையும் சவுல் மனிதரை அனுப்பினான். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள். 22இறுதியாகச் சவுல் தானே ராமாவிற்குப் போவதற்கு புறப்பட்டான். அவன் சேக்குவிலுள்ள பெரிய துரவுக்கு வந்தபோது, அங்கு நின்றவர்களிடம், “சாமுயேலும், தாவீதும் எங்கே?” என்று கேட்டான்.
அதற்கு அங்கு நின்றவர்கள், “ராமாவிலுள்ள நாயோதிலே அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள்.
23அப்பொழுது சவுல் ராமாவிலுள்ள நாயோதுக்குப் போகும் வழியில் இறைவனின் ஆவியானவர் அவன் மேலும் இறங்கினார். அவன் நாயோதுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் இறைவாக்கு உரைத்துக்கொண்டே போனான். 24சவுல் தன் மேலுடையைக் கழற்றிவிட்டு சாமுயேலுக்கு முன்பாக மற்றவர்களைப்போல் இறைவாக்கு உரைத்தான். அன்று பகலும் இரவும் அவ்வாறே விழுந்து கிடந்தான். இதனாலேயே, “சவுலும் இறைவாக்கு உரைப்போரில் ஒருவனோ?” என்று மக்கள் கேட்கும் வழக்கம் உண்டாயிற்று.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in