YouVersion Logo
Search Icon

ஆமோஸ் 1

1
1தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள்.
2அவன் சொன்னதாவது:
“யெகோவா சீயோனிலிருந்து கர்ஜிக்கிறார்;
எருசலேமிலிருந்து முழங்குகிறார்.
மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் உலர்ந்து போகின்றன.
கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகிறது.”
இஸ்ரயேலரின் அயலவர்மேல் நியாயத்தீர்ப்பு
3யெகோவா சொல்வது இதுவே:
“தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனென்றால் அவர்கள் கீலேயாத்தை இரும்பு பற்களுள்ள கருவிகளால் போரடித்தார்களே.
4ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது அவனுடைய மகன் பெனாதாதின் அரண்களையும் எரித்துப்போடும்.
5தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன்.
ஆவேன் பள்ளத்தாக்கிலுள்ள அரசனை அழித்து,
பெத் ஏதேனில் செங்கோல் பிடிப்பவனையும் அழிப்பேன்;
ஆராமின் மக்களை கீருக்கு நாடுகடத்துவேன்”
என்று யெகோவா சொல்கிறார்.
6யெகோவா சொல்வது இதுவே:
“காசா பட்டணம் திரும்பதிரும்ப செய்த
அநேக பாவங்களின் நிமித்தம்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனெனில் அவர்கள் முழுச்சமுதாயத்தையும் சிறைப்பிடித்து ஏதோமியரிடம் விற்றார்களே.
7காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்;
அது அதன் அரண்களை சுட்டெரிக்கும்.
8அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன்.
அஸ்கலோனில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன்.
பெலிஸ்தியரில் கடைசியாய் இருப்பவன் சாகும்வரைக்கும்,
எக்ரோனுக்கெதிராக என் கரத்தை நீட்டுவேன்”
என்று ஆண்டவராகிய யெகோவா சொல்கிறார்.
9யெகோவா சொல்வது இதுவே:
“தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து,
சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே.
10தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
11யெகோவா சொல்வது இதுவே:
“ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
இரக்க உணர்வின்றி தன் சகோதரனான
இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே.
அத்துடன் அவன் கோபம் அடங்காமல்,
அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
12தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது போஸ்றாவின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
13யெகோவா சொல்வது இதுவே:
“அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும்,
நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
தன் எல்லைகளை விரிவாக்கும்படி கீலேயாத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
14ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன்.
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.
அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும்,
புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும்.
15அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான்.
அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்”
என்று யெகோவா சொல்கிறார்.

Currently Selected:

ஆமோஸ் 1: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in