YouVersion Logo
Search Icon

யோபு 16

16
யோபு பேசுதல்
1அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
2“நான் இதுபோன்ற அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்;
நீங்கள் எல்லோரும் துன்பத்துக்குள்ளாக்கும் தேற்றரவாளர்கள்!
3காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா?
உங்களை இப்படித் தொடர்ந்து பேசவைப்பது என்ன?
4நீங்கள் என் நிலையில் இருந்தால்,
என்னாலும் உங்களைப்போல் பேசமுடியும்;
நான் உங்களுக்கு விரோதமாய்ச் சிறந்த சொற்பொழிவாற்றி,
உங்களுக்கு எதிரே என் தலையை ஏளனமாய் அசைக்கவும் முடியும்.
5ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன்,
என் உதடுகளிலிருந்து வரும் ஆறுதல் உங்கள் துன்பத்தை ஆற்றும்.
6“நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது;
பேசாவிட்டால் அது அகன்று போவதுமில்லை.
7இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்;
என் குடும்பத்தையும் நீர் பாழாக்கிவிட்டீர்.
8நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது;
என் மெலிவு எனக்கு விரோதமாக எழுந்து சாட்சி கூறுகிறது.
9இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து,
என்னைப் பார்த்து தமது பற்களை கடிக்கிறார்;
என் எதிரி தமது கண்களால் என்னை கூர்ந்து பார்க்கிறார்.
10மனிதர் என்னைக் கேலிசெய்யத் தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்;
ஏளனத்துடன் என்னைக் கன்னத்தில் அறைந்து
எனக்கு விரோதமாய் ஒன்றுகூடுகிறார்கள்.
11இறைவன் என்னைத் தீய மனிதரிடம் ஒப்புக்கொடுத்து,
கொடியவர்களின் பிடிக்குள் என்னை சிக்கவைத்தார்.
12நான் நலமாய் இருந்தேன், அவர் என்னைச் சிதறடித்தார்;
அவர் என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கினார்.
அவர் என்னைத் தமது இலக்காக ஆக்கினார்;
13அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.
இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்தி
எனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார்.
14திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி,
ஒரு போர்வீரனைப்போல் என்னைத் தாக்குகிறார்.
15“நான் துக்கவுடையைத் தைத்து என் உடலுக்குப் போர்த்தினேன்;
என் மேன்மையைப் தூசியில் புதைத்தேன்.
16என் முகம் அழுகையால் சிவந்து,
என் கண்கள் இருளடைந்தது;
17இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை;
என் ஜெபம் தூய்மையானது.
18“பூமியே என் இரத்தத்தை மூடி மறைக்காதே#16:18 மூடி மறைக்காதே அல்லது எனக்கு செய்த தவறுகளை மறைக்காதே.;
என் கதறல் ஒருபோதும் ஓய்ந்து போகாதிருக்கட்டும்!
19இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது;
எனக்காக வழக்காடுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.
20என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது,
எனக்காகப் பரிந்துபேசுகிறவர் என் சிநேகிதர்.
21ஒருவன் தன் சிநேகிதனுக்காகப் பரிந்துபேசுகிறதுபோல,
அவரும் மனிதனுக்காக இறைவனுடன் பேசுகிறார்.
22“நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு,
இன்னும் சில வருடங்களே இருக்கின்றன.

Currently Selected:

யோபு 16: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in