YouVersion Logo
Search Icon

சங்கீதம் 10

10
சங்கீதம் 10
1யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்?
துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்?
2கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்;
அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
3அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்;
அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான்.
4கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை;
அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை.
5அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன;
உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்;
தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான்.
6அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை,
எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான்.
7அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது;
அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன.
8அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்;
பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான்.
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து,
9பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான்.
அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்;
அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான்.
10அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்;
அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள்.
11“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்;
அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை”
என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
12யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்;
ஆதரவற்றோரை மறவாதிரும்.
13கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்?
“அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று
அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்?
14ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்;
நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து,
அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர்.
பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்;
திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர்.
15கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும்.
தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும்.
இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
16யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்;
அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள்.
17யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்;
அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார்.
18பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும்
மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி,
நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in