YouVersion Logo
Search Icon

சங்கீதம் 139

139
சங்கீதம் 139
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர்,
நீர் என்னை அறிந்துமிருக்கிறீர்.
2நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்;
நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர்.
3நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்;
என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர்.
4என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே,
யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர்.
5நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து,
நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர்.
6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
விளங்கிக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது.
7உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்?
உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்?
8நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
9அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும்,
கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும்,
10அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்;
உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்.
11“நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும்,
ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும்,
12இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது;
இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்;
ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது.
13என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்;
என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர்.
14நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால்,
நான் உம்மைத் துதிக்கிறேன்;
உமது செயல்கள் ஆச்சரியமானவை,
நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன்.
15நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது,
நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது,
என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை.
16உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன;
எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும்,
அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
17இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை!
அவைகளின் தொகை எவ்வளவு பெரியது!
18நான் அவைகளை எண்ணப்போனால்,
அவை மணலைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கும்;
நான் விழிக்கும்போதோ இன்னும் உம்முடனேயே இருக்கிறேன்.
19இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்!
இரத்தவெறியரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்!
20அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்;
உம்முடைய விரோதிகள் உமது பெயரைத் தவறாய் பயன்படுத்துகிறார்கள்.
21யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ?
உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமல் இருக்கிறேனோ?
22ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன்.
அவர்களை என் பகைவர்களாகவே நான் எண்ணுகிறேன்.
23இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னை சோதித்து என் வருத்தமான சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து,
நித்திய வழியிலே என்னை நடத்தும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in