YouVersion Logo
Search Icon

சங்கீதம் 141

141
சங்கீதம் 141
தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்;
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும்.
2என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்;
என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
3யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்;
என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து
கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி
என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்;
அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும்.
5நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது;
நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும்.
என் தலை அதை புறக்கணிக்காது;
என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது.
6அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து
கீழே தள்ளிவிடப்படுவார்கள்;
அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை
கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள்.
7“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல்,
எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன”
என்று அவர்கள் சொல்வார்கள்.
8ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன;
நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும்.
9தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும்,
அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும்.
10நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க,
கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in