YouVersion Logo
Search Icon

சங்கீதம் 38

38
சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான விண்ணப்பமாகிய தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்;
உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும்.
2உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன;
உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது.
3உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
4நான் தாங்கமுடியாத சுமையைப்போல
என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.
5என் மதிகேட்டினால்
எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
6நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்;
நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன்.
7எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது;
என் உடலில் சுகமே இல்லை.
8நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்;
உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.
9யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை.
10என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது;
என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று.
11எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம்,
என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள்.
என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.
12என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்;
நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.
13நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
14காது காதுகேட்காதவனும்,
தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன்.
15யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்;
என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.
16“என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்;
அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன்.
17நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்;
என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
18என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்;
என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன்.
19காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்;
எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.
20நான் நன்மையானதைச் செய்தபோதும்,
நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள்
என்னைக் குற்றப்படுத்துகிறார்கள்.
21யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்;
என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.
22என் இரட்சகராகிய யெகோவாவே,
எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in