YouVersion Logo
Search Icon

சங்கீதம் 52

52
சங்கீதம் 52
தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.
1பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்?
இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு
எந்நாளும் உள்ளது.
2வஞ்சகம் செய்கிறவனே,
உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது;
அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது.
3நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும்
உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய்.
4வஞ்சக நாவே,
நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்!
5இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்:
அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி,
வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார்.
6இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்;
அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து,
7“இதோ பாருங்கள்,
இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்;
தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து,
தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள்.
8ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல்
இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்;
நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில்
எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
9நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக
நான் உம்மை என்றென்றும் துதிப்பேன்,
உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்;
இறைவனே உமது பெயர் நல்லது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in