YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 20

20
1திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்.
2ஒரு ராஜாவின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு ராஜாவைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய்.
3எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும்.
4ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை.
5நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்.
6பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது.
7நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.
8ஒரு ராஜா நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.
9ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது.
10தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார்.
11ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.
12பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.
13நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும்.
14உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான்.
15தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது.
16அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய்.
17ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும்.
18திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெறவேண்டும். நீ ஒரு போரைத் துவங்கினால், போர் நடவடிக்கைகளில் சிறந்த அறிவுடையவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்.
19அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே.
20ஒருவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதிராகப் பேசினால், அவன் அணைந்துகொண்டிருக்கும் விளக்கைப் போன்றவன்.
21உனது செல்வமானது பெறுவதற்கு எளிதானதாக இருந்தால், அது உனக்கு அத்தனை உயர்வாகத் தோன்றாது.
22எவனாவது உனக்கு எதிராக எதையாவது செய்தால் நீயாக அவனைத் தண்டிக்க முயலாதே. கர்த்தருக்காகக் காத்திரு. இறுதியில் உன்னை அவர் வெற்றிப்பெறச் செய்வார்.
23சிலர் சரியில்லாத அளவு முறைகளையும் எடைகளையும் பயன்படுத்துவார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கர்த்தர் இதனை வெறுக்கிறார். அது அவனை மகிழ்ச்சிக்குட்படுத்தாது.
24ஒவ்வொருவருக்கும் என்ன நிகழும் என்பதை கர்த்தர் முடிவு செய்கிறார். எனவே ஒருவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.
25தேவனுக்கு ஏதாவது கொடுப்பதாக வாக்குறுதி சொல்லுமுன் நன்றாகச் சிந்திக்கவேண்டும். இல்லை என்றால் இந்த வாக்குறுதியைத் தராமலேயே இருந்திருக்கலாம் என்று பின்னால் நீ வருந்துவாய்.
26யார் தீயவர் என்னும் முடிவை அறிவாளியான ராஜாவே எடுப்பான். அந்த ராஜாவே அவர்களைத் தண்டிப்பான்.
27ஒரு மனிதனின் ஆவி கர்த்தருக்கு முன்பாக ஒரு விளக்கைப்போலிருக்கிறது. அவனுள் இருப்பது என்ன என்பதையும் கர்த்தர் அறிவார்.
28ராஜா உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தால் அவன் தன் அதிகாரத்தைக் காத்துக்கொள்வான். அவனது உண்மையான அன்பு ஆட்சியைப் பலப்படுத்தும்.
29நாம் ஒரு இளைஞனை அவனது வலிமைக்காக விரும்புகிறோம். முதியவரை அவரது முழுமையான வாழ்க்கையைக் காட்டும் நரைத்த முடிக்காக மதிக்கிறோம். அவரது நரைத்த தலைமுடி அவர் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்று பொருள் தரும்.
30நாம் தண்டிக்கப்பட்டால் தவறு செய்வதை நிறுத்திவிடுவோம். வேதனையானது ஒருவனை மாற்றும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in