நீதி 7
7
அத்தியாயம் 7
விபசாரிக்கு எதிரான எச்சரிக்கை
1என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து,
என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
2என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள்,
அப்பொழுது பிழைப்பாய்.
3அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி,
அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள்.
4ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
5ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும்,
புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
6நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று,
அதின் வழியாகப் பார்த்தபோது,
7பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே
ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன்.
8அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும்,
இரவின் இருளிலும்.
9அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று,
அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
10அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த
தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
11அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்;
அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
12சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள்,
சந்துகள்தோறும் மறைந்திருப்பாள்.
13அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு,
முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது,
இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு,
உன் முகத்தை ஆவலோடு தேடினேன்;
இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
16என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும்,
எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.
17என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும்
சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
18வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம்,
இன்பங்களினால் பூரிப்போம்.
19கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
20பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான்,
குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
21தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி,
தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
22உடனே அவன் அவள் பின்னே சென்றான்;
ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும்,
ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
23ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல்
அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும்,
அவளுக்குப் பின்னே போனான்;
அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
25உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்;
அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே.
26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்;
பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
27அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி;
அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Currently Selected:
நீதி 7: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.