1 சாமுயேல் 12
12
சாமுயேலின் பிரியாவிடைப் பேச்சு
1அப்பொழுது சாமுயேல் இஸ்ரயேல் மக்களனைவரிடமும், “நீங்கள் எனக்குச் சொன்னவற்றையெல்லாம் கேட்டு உங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தினேன். 2இப்பொழுது உங்களுக்குத் தலைவனாக ஒரு அரசன் இருக்கிறான். என்னைப் பொறுத்தமட்டில் நான் நரைத்த கிழவன். என் மகன்கள் உங்களோடு இருக்கிறார்கள். நான் எனது வாலிபகாலம் தொடங்கி இன்றுவரை உங்களுக்குத் தலைவனாக இருந்தேன். 3இதோ நான் உங்கள்முன் நிற்கிறேன். யெகோவாவுக்கு முன்பாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு முன்பாகவும் எனக்கெதிராகச் சாட்சி சொல்லுங்கள். நான் யாருடைய மாட்டை எடுத்திருக்கிறேன்? யாருடைய கழுதையை எடுத்திருக்கிறேன்? யாரை நான் ஏமாற்றியிருக்கிறேன்? யாரை நான் ஒடுக்கியிருக்கிறேன்? யாரிடமாவது இலஞ்சம் வாங்கி, பிழையைக் கண்டும் காணாததுபோல நான் இருந்ததுண்டா? இவற்றில் எதையாவது நான் செய்திருந்தால் அதைச் சரிசெய்துகொள்வேன்” என்றான்.
4அதற்கு அவர்கள், “நீர் எங்களை ஏமாற்றவுமில்லை, ஒடுக்கவுமில்லை, நீர் ஒருவனுடைய கையிலிருந்து எதையும் வாங்கிக்கொள்ளவும் இல்லை” என்றார்கள்.
5அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “என்னிடம் நீங்கள் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்பதற்கு யெகோவா உங்களுக்கு எதிரான சாட்சியாயிருக்கிறார். அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், இன்று அதற்குச் சாட்சியாயிருக்கிறார்” என்றான்.
அதற்கு அவர்கள், “அவரே சாட்சி” என்றார்கள்.
6மறுபடியும் சாமுயேல் மக்களிடம், “மோசேயையும், ஆரோனையும் நியமித்து, உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர் யெகோவாவே. 7இப்பொழுது இங்கே வந்து நில்லுங்கள். ஏனெனில் யெகோவா உங்களுக்கும், உங்கள் தந்தையர்களுக்கும் செய்த எல்லா நேர்மையான செயல்களையும் பற்றி அவர் முன்னிலையில் உங்களுக்கு நேர்முகமாய் எடுத்துச் சொல்லப்போகிறேன்.
8“யாக்கோபு எகிப்திற்குள் வந்தபின், உங்கள் முற்பிதாக்கள் யெகோவாவிடம் உதவிகேட்டு அழுதார்கள். அப்பொழுது யெகோவா மோசேயையும், ஆரோனையும் அனுப்பி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து, இந்த இடத்தில் குடியிருக்கச் செய்தார்.
9“ஆனால் அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்தார்கள். ஆகவே அவர் அவர்களை ஆத்சோரின் படைத் தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும், அவர்களுக்கு எதிராகப் போரிட்ட மோவாப் அரசன் கையிலும் விற்றுப்போட்டார். 10அவர்கள் யெகோவாவிடம், ‘நாங்கள் பாவம்செய்தோம். யெகோவாவை கைவிட்டு பாகால்களுக்கும், அஸ்தரோத் தெய்வங்களுக்கும் பணிசெய்தோம். இப்பொழுது எங்கள் பகைவரிடமிருந்து எங்களை விடுதலையாக்கும். நாங்கள் உமக்கு பணிசெய்வோம்’ என்று அழுதார்கள். 11அப்பொழுது யெகோவா யெருபாகாலையும், பெதானையும்#12:11 பெதானையும் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பில் பாராக்கையும் என்றுள்ளது., யெப்தாவையும், சாமுயேலையும் அனுப்பி, எல்லாப் பக்கங்களிலுமிருந்த பகைவர்களுடைய கைகளிலிருந்தும் உங்களை விடுவித்தார். அதன்பின் நீங்கள் பாதுகாப்பாய் வாழ்ந்து வந்தீர்கள்.
12“பின்பு அம்மோனியரின் அரசனான நாகாஸ், உங்களை எதிர்த்து யுத்தமிட வந்தான். அப்போது உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு அரசனாக இருந்துங்கூட நீங்கள் என்னிடம், ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்றீர்கள். 13ஆகையால் இப்பொழுது நீங்கள் கேட்டபடியே நீங்கள் தெரிந்துகொண்ட அரசன் இங்கே இருக்கிறார். உங்களுக்கு மேலாக யெகோவா ஏற்படுத்தியிருக்கிற அரசனைப் பாருங்கள். 14நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை வழிபட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எதிர்த்துக் கலகம் பண்ணாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது. நீங்களும் உங்களை ஆளும் அரசனும் உங்கள் இறைவனாகிய யெகோவாவை பின்பற்றுவீர்களானால் அது உங்களுக்கு நலமாயிருக்கும். 15ஆனால் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை எதிர்த்துக் கலகம் பண்ணினால், உங்கள் முற்பிதாக்களுக்கு விரோதமாக அவருடைய கை இருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.
16“இப்பொழுதும் யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யப்போகும் பெரிய செயலை நின்று பாருங்கள். 17இப்போது கோதுமை அறுவடை காலமல்லவா? மழை பெய்யாத இக்காலத்தில் இடிமுழக்கத்தையும், மழையையும் அனுப்பும்படி நான் யெகோவாவிடம் மன்றாடுவேன். நீங்கள் உங்களுக்கென ஒரு அரசன் வேண்டுமென்று கேட்டதால் யெகோவாவின் பார்வையில் நீங்கள் எப்படியான தீமையான செயலைச் செய்தீர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள்” என்றான்.
18அப்படியே சாமுயேல் யெகோவாவிடம் மன்றாடினான். அன்றைய தினமே முழக்கத்தையும், மழையையும் யெகோவா அனுப்பினார். இதைக் கண்ட மக்களனைவரும் யெகோவாவுக்கும், சாமுயேலுக்கும் முன்பாக பிரமித்து நின்றார்கள்.
19அவர்கள் அனைவரும் சாமுயேலிடம், “நாங்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றுடனும் ஒரு அரசன் வேண்டுமென்று கேட்டு இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோமே. ஆகையால் நாங்கள் சாகாதபடிக்கு உமது இறைவனாகிய யெகோவாவிடம் உமது அடியவர்களான எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்றார்கள்.
20அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; இந்தத் தீமையான செயல்களையெல்லாம் செய்திருக்கிறீர்கள். ஆகிலும் யெகோவாவைவிட்டு விலகாமல் உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்குப் பணிசெய்யுங்கள். 21பயனற்ற தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரும்பவும் செல்லவேண்டாம். அவை பயனற்றவையாகையால் உங்களுக்கு அவை எந்தவித நன்மை செய்யவோ, அல்லது உங்களை விடுதலையாக்கவோ மாட்டாது. 22யெகோவாவின் மகத்துவமான பெயருக்காக அவர் தன் மக்களைத் தள்ளிவிடமாட்டார். ஏனெனில் அவர் உங்களைத் தன் சொந்த மக்களாக்கிக்கொள்ள விருப்பம்கொண்டாரே. 23என்னைப் பொறுத்தமட்டில் நான் உங்களுக்காக மன்றாடத் தவறி யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம்செய்வது எனக்குத் தூரமாயிருக்கட்டும். எனவே நான் உங்களுக்கு நன்மையும், நீதியுமான வழியைக் கற்பிப்பேன். 24நீங்கள் யெகோவாவுக்கு பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவருக்குப் பணிசெய்யும்படி எவ்வளவு பெரிய செயல்களை அவர் உங்களுக்காகச் செய்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 25அப்படியிருந்தும் இன்னும் தொடர்ந்து தீமையைச் செய்வீர்களானால், நீங்களும் உங்கள் அரசனும் அழிந்துபோவீர்கள்” என்றான்.
Currently Selected:
1 சாமுயேல் 12: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.