ஆமோஸ் 2
2
1யெகோவா சொல்வது இதுவே:
“மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனெனில் ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச்
சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.
2மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது கீரியோத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.
யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும்
மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து போகும்.
3நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன்.
அவளுடைய அதிகாரிகளை அவனுடன் கொல்லுவேன்”
என்று யெகோவா சொல்லுகிறார்.
4யெகோவா சொல்வது இதுவே:
“யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
அவர்கள் யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து,
அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள்.
ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய
போலித் தெய்வங்கள் அவர்களை வழிவிலகப்பண்ணின.
5ஆகையால் யூதாவின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது எருசலேமின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
இஸ்ரயேலின் நியாயத்தீர்ப்பு
6யெகோவா சொல்வது இதுவே:
“இஸ்ரயேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
அவர்கள் நீதியானவர்களை வெள்ளிக்காகவும்,
சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்புக்காகவும் விற்றார்களே.
7தரையின் புழுதியை மிதிப்பதுபோல்
ஏழைகளின் தலைகளை அவர்கள் மிதிக்கிறார்களே.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள்.
தகப்பனும் மகனும் ஒரே பெண்ணிடம் உறவுகொண்டு,
என் பரிசுத்த பெயரைத் தூய்மைக் கேடாக்குகிறார்கள்.
8அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும்
தாங்கள் அடைமானமாய் வாங்கிய உடைகளை விரித்துப் படுக்கிறார்கள்.
அபராதமாய்ப் பெற்ற திராட்சை இரசத்தைத் தங்கள்
தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.
9“எமோரியர் கேதுருமரங்களைப்போல் உயரமாயும்,
கர்வாலி மரங்களைப்போல் வைரமாயும் இருப்பினும்,
நான் என் மக்களுக்கு நாட்டைப் பெற்றுக் கொடுக்க
அவர்களை இவர்களுக்கு முன்பாக அழித்தேன்.
மேலே அவர்களுடைய பழங்களையும்,
கீழே அவர்களுடைய வேர்களையும் நானே அழித்தேன்.
10எமோரியர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்காக,
எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து,
நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் உங்களை வழிநடத்தினேன்.
11“நான் உங்கள் மகன்களிலிருந்து இறைவாக்கினரையும்,
உங்கள் வாலிபரிலிருந்து நசரேயர்களையும் எழுப்பினேன்.
இஸ்ரயேல் மக்களே, இது உண்மையல்லவா?”
என யெகோவா அறிவிக்கிறார்.
12“ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சை இரசம் குடிக்கப்பண்ணினீர்கள்.
இறைவாக்குச் சொல்லக்கூடாது என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
13“தானியத்தினால் நிறைந்த வண்டியில் நசுக்குவதுபோல,
நான் உங்களை நசுக்குவேன்.
14அப்பொழுது உங்களில் வேகமாய் ஓடக்கூடியவர்கள் தப்பமாட்டார்கள்,
பலமுள்ளவர்கள் தங்கள் பலத்தை ஒன்றுதிரட்டமாட்டார்கள்,
இராணுவவீரனுங்கூட தன் உயிரைத் தப்புவிக்கமாட்டான்.
15வில்வீரனும் தனது இடத்தில் நிற்கமாட்டான்,
வேகமாய் ஓடும் இராணுவவீரனும் ஓடித்தப்பமாட்டான்,
குதிரைவீரனும் தன் உயிரைக் காப்பாற்றமாட்டான்.
16அந்நாளில் துணிவுமிக்க வீரர்களும்
நிர்வாணமாய் ஓடித்தப்புவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
Currently Selected:
ஆமோஸ் 2: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.