யாத்திராகமம் 25
25
இறைசமுகக் கூடார காணிக்கைகள்
1யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: 2“எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி இஸ்ரயேல் மக்களுக்குச் சொல். உள்ளத்தில் ஆர்வத்துடன் கொடுக்கும் ஒவ்வொருவனிடமிருந்தும் காணிக்கையை எனக்காக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
3“நீ அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவையே:
“தங்கம், வெள்ளி, வெண்கலம்;
4நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணி;
வெள்ளாட்டு உரோமம்,
5சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல்#25:5 கடல்நீரில் வாழும் ஒருவகை விலங்கின் தோல்;
சித்தீம் மரம்;
6வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய்;
அபிஷேக எண்ணெய்க்கும் நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;
7ஏபோத்திலும்,#25:7 பிரதான ஆசாரியன் அணிந்திருந்த கவசம் போன்ற மேலாடை. மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.
8“அதன்பின் அவர்கள் எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அமைக்கட்டும். நான் அவர்கள் மத்தியில் குடியிருப்பேன். 9இந்த இறைசமுகக் கூடாரத்தையும், அதன் எல்லா பணிமுட்டுகளையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்யவேண்டும்.
உடன்படிக்கைப்பெட்டி
10“அவர்கள் சித்தீம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யவேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கவேண்டும். 11நீ அந்தப் பெட்டியை, உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும். 12தங்கத்தினால் நான்கு வளையங்கள் வார்ப்பித்து, அவற்றை அதன் நான்கு கால்களிலும் பொருத்து. அவைகள் ஒரு பக்கத்தில் இரண்டும், மறுபக்கத்தில் இரண்டும் பொருத்தப்பட வேண்டும். 13சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைச் சுத்தத் தங்கத் தகட்டினால் மூடவேண்டும். 14பெட்டியைச் சுமப்பதற்கு, அந்தக் கம்புகளை பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களில் மாட்டிவை. 15பெட்டியின் வளையங்களிலேயே அந்தக் கம்புகள் இருக்கவேண்டும். அவைகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டும். 16நான் உனக்குத் தரப்போகும் சாட்சிப்பிரமாணத்தை#25:16 சாட்சிப்பிரமாணத்தை அல்லது உடன்படிக்கை. அந்தப் பெட்டிக்குள் வை.
17“சுத்தத் தங்கத்தினால் ஒரு கிருபாசனத்தைச் செய்யவேண்டும். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருக்க வேண்டும். 18அதன் இரு முனைகளிலும் தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்யவேண்டும். 19ஒரு கேருபீனை ஒரு முனையிலும், இன்னொன்றை மறு முனையிலும் செய்யவேண்டும். கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் கேருபீன்கள் அமையும்படி, ஒரே தகட்டினாலேயே அவற்றைச் செய்யவேண்டும். 20அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியபடி மேல்நோக்கி விரிந்திருக்க வேண்டும். அந்த கேருபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தபடி ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கவேண்டும். 21கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வை. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சியத்தை பெட்டிக்குள் வை. 22அங்கே கிருபாசனத்தின் மேலும் சாட்சிப்பெட்டியின்மேலும் இருக்கும் இரண்டு கேருபீன்களுக்கிடையில் நான் உன்னைச் சந்தித்து, இஸ்ரயேலருக்கான எல்லா கட்டளைகளையும் உன்னிடம் கொடுப்பேன்.
மேஜை
23“மேலும் சித்தீம் மரத்தினால் ஒரு மேஜையைச் செய்யவேண்டும். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருக்கவேண்டும். 24அதைச் சுத்தமான தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும். 25அத்துடன் அதைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமான ஒரு சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்க விளிம்புச்சட்டத்தை இணை. 26மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்து. 27மேஜையைத் தூக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் கம்புகளைப் பிடிக்கும்படி, அந்த வளையங்கள் விளிம்புச் சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். 28அக்கம்புகளை சித்தீம் மரத்தால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும். அவற்றினாலேயே இந்த மேஜையைச் சுமக்கவேண்டும். 29மேஜையின் தட்டுகளையும், கிண்ணங்களையும் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும். அத்துடன் பானகாணிக்கைகளை ஊற்றுவதற்கான கிண்ணங்களையும், ஜாடிகளையும் தங்கத் தகட்டினாலேயே செய்யவேண்டும். 30இறைசமுக அப்பம் எப்பொழுதும் எனக்கு முன்னாக இருக்கும்படி அதை இந்த மேஜையின்மேல் வை.
குத்துவிளக்கு
31“சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய்யவேண்டும். அதன் அடிப்பாகமும், தண்டும், பூ வடிவமான அதன் கிண்ணங்களும், மொட்டுகளும், பூக்களும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினாலேயே செய்யப்படவேண்டும். 32ஆறு கிளைகள் குத்துவிளக்கின் பக்கங்களிலிருந்து விரிந்து தோன்றவேண்டும். மூன்று கிளைகள் ஒரு பக்கத்திலும், மூன்று கிளைகள் மறுபக்கத்திலும் இருக்கவேண்டும். 33ஒரு கிளையில் வாதுமை பூக்கள் வடிவமான மூன்று கிண்ணங்கள் அதன் மொட்டுகளுடனும், மலர்களுடனும் இருக்கவேண்டும். அப்படியே அடுத்த கிளையிலும் மூன்று கிண்ணங்கள் இருக்கவேண்டும். இவ்விதமாக அந்த குத்துவிளக்கிலிருந்து விரிந்துபோகும் ஆறுகிளைகளிலும் இருக்கவேண்டும். 34குத்துவிளக்கின் உச்சியில் வாதுமைப் பூக்களைப் போன்ற நான்கு கிண்ணங்கள் அவற்றின் மொட்டுகளோடும், மலர்களோடும் இருக்கவேண்டும். 35குத்துவிளக்கிலிருந்து விரியும், முதல் ஜோடிக்கிளைகளுக்குக் கீழே, ஒரு மொட்டு இருக்கவேண்டும். இரண்டாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டு இருக்கவேண்டும். மூன்றாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டு இருக்கவேண்டும். எல்லாமுமாக ஆறு கிளைகள் இருக்கவேண்டும். 36மொட்டுகளும், கிளைகளும் குத்துவிளக்குடன் சுத்தத் தங்கத்தின் ஒரே தகட்டிலிருந்து அடித்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
37“பின்பு அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்து, குத்துவிளக்கின் முன்பக்கத்தில் வெளிச்சம் தரக்கூடியதாக, அவற்றை குத்துவிளக்கின் மேல் வை. 38விளக்குத்திரி கத்தரிகளும், தட்டுகளும் சுத்தத் தங்கத்தினால் செய்யப்படவேண்டும். 39குத்துவிளக்கையும், அதற்குரிய உபகரணங்கள் யாவற்றையும் செய்ய ஒரு தாலந்து#25:39 அதாவது, சுமார் 75 பவுண்டுகள் அல்லது 34 கிலோகிராம் சுத்தத்தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும். 40இங்கே மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே, இவைகளையெல்லாம் செய்யும்படி நீ கவனமாயிரு.”
Currently Selected:
யாத்திராகமம் 25: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.