ஓசியா 11
11
யெகோவா இஸ்ரயேலில் அன்பாயிருத்தல்
1“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்;
எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்.
2ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ,
அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள்.
அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு,
உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள்.
3எப்பிராயீமைக் கைபிடித்து
நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே;
ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே
என்பதை அவர்கள் உணரவில்லை.
4நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும்
மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன்.
ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன்,
அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன்,
அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.
5“ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுக்கிறார்கள்.
ஆகையால் அவர்கள் எகிப்திற்கு திரும்பிப் போகமாட்டார்களோ?
அவர்கள்மேல் அசீரியா ஆளுகை செய்யாதோ?
6நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால்
வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து,
வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு, அவர்களை அழிக்கும்.
7என் மக்கள் என்னைவிட்டு விலகிப்போகத் தீர்மானித்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னை உன்னதமானவர் எனக் கூப்பிட்டாலும்,
அவர்களை எவ்விதத்திலும் உயர்த்தமாட்டேன்.
8“ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்?
இஸ்ரயேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?
நான் எப்படி உன்னை அத்மா பட்டணத்தைப்போல் அழிக்கமுடியும்?
நான் எப்படி உன்னை செபோயீமைப்போல் ஆக்கமுடியும்?
என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது;
என் கருணை பொங்குகிறது.
9ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்தமாட்டேன்;
நான் திரும்பி எப்பிராயீமை அழிக்கமாட்டேன்.
ஏனெனில் எப்படியிருந்தும் உங்கள் மத்தியில் வாழ்கின்ற பரிசுத்தரான நான் மனிதனல்ல;
நான் இறைவன்.
எனவே நான் கடுங்கோபத்துடன் வரமாட்டேன்.
10ஒருகாலத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்;
அவர் சிங்கத்தைப்போல் கர்ஜிப்பார்.
அவர் கர்ஜிக்கும்போது,
அவருடைய பிள்ளைகள் மேற்குத் திசையிலிருந்து நடுக்கத்துடன் வருவார்கள்.
11எகிப்திலிருந்து பறவைகள் வருவதுபோலவும்,
அசீரியாவிலிருந்து புறாக்கள் வருவதுபோலவும்
அவர்கள் நடுக்கத்துடன் வருவார்கள்.
நான் அவர்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்துவேன்”
என யெகோவா அறிவிக்கிறார்.
இஸ்ரயேலின் பாவம்
12எப்பிராயீமியர் பொய்களுடனும்,
இஸ்ரயேல் குடும்பம் வஞ்சனையுடனும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
யூதாவும் உண்மையுள்ள,
பரிசுத்தரான இறைவனுக்கு எதிராக அடங்காமல் எதிர்த்து நிற்கிறான்.
Currently Selected:
ஓசியா 11: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.