யோபு 20
20
சோப்பார் பேசுதல்
1அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:
2“நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால்,
என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது.
3என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்;
என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.
4“மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து,
எவ்வாறு இருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரியும்:
5கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம்,
இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.
6இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும்,
அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,
7அவன் உரம் போல அழிந்தே போவான்;
அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.
8ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்;
இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.
9அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது;
அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது.
10அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்;
அவனுடைய#20:10 அவனுடைய பிள்ளைகளின் கைகள். கைகள் அவனுடைய செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.
11அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை,
அவனுடன் தூசியில் கிடக்கும்.
12“தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும்,
அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான்.
13அதை விட்டுவிட மனமில்லாமல்
தன் வாயில் வைத்திருக்கிறான்.
14ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி,
அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும்.
15அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்;
இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார்.
16அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்;
விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும்.
17தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும்,
நீரோடைகளிலும் அவன் இன்பம் காணமாட்டான்.
18அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்;
அவன் தன் வியாபாரத்தின் இலாபத்தையும் அனுபவிப்பதில்லை.
19அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்;
தான் கட்டாத வீடுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.
20“நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை;
ஆதலால், தான் இச்சித்த பொக்கிஷங்களில் எதுவும் மீந்துவதில்லை.
21அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை;
அவனுடைய செழிப்பும் நிலைக்காது.
22அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்;
அவலத்தின் கொடுமை முழுமையாய் அவன்மேல் வரும்.
23அவன் வயிறு நிரம்பும்போது,
இறைவன் தமது கடுங்கோபத்தை அவன்மேல் வரப்பண்ணி,
அடிமேல் அடியாக அவனை வாதிப்பார்.
24அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும்,
வெண்கல முனையுள்ள அம்பு அவனைக் குத்துகிறது.
25அவன் அதைத் தன் முதுகிலிருந்தும்,
அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான்.
பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன;
26அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும்.
அணையாத நெருப்பு அவனைச் சுட்டெரித்து,
அவனுடைய கூடாரத்தில் மீதியாயிருப்பதையும் விழுங்கிப்போடும்.
27வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்;
பூமி அவனுக்கெதிராக எழும்பும்.
28அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்;
இறைவனுடைய கோபத்தின் நாளிலே, அதை வெள்ளம் அள்ளிக்கொண்டுபோகும்.
29கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே;
இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”
Currently Selected:
யோபு 20: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.