யோசுவா 21
21
லேவியரின் பட்டணங்கள்
1அதன்பின் லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள், ஆசாரியன் எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், மற்றும் இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களையும் 2கானான் தேசத்தில் உள்ள சீலோ நகரில் சந்தித்தார்கள். அவர்கள், “யெகோவா மோசே மூலமாக நாங்கள் வசிப்பதற்குப் பட்டணங்களையும் எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் கொடுக்கவேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார்” என்று அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள்.
3எனவே யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர், லேவியர்களுக்குத் தமது சொத்துரிமையில் இருந்து, பின்வரும் பட்டணங்களையும், மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள்.
4முதலாவது சீட்டு வம்சம் வம்சமாக கோகாத்தியருக்கு விழுந்தது. ஆசாரியன் ஆரோனின் வழித்தோன்றிய லேவியருக்கு யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன.
5கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம், தாண், மனாசேயின் அரைக்கோத்திரம் ஆகிய வம்சங்களுக்கும் நியமித்த பகுதியிலிருந்து பத்துப் பட்டணங்கள் வழங்கப்பட்டன.
6கெர்சோனின் வழித்தோன்றலுக்கு இசக்கார், ஆசேர், நப்தலி கோத்திரங்களிலும், பாசானில் தங்கிய மனாசேயின் அரைக் கோத்திரத்திலும் உள்ள வம்சங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன.
7மெராரி சந்ததிகள் வம்சம் வம்சமாக ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களிலிருந்து பன்னிரண்டு பட்டணங்களைப் பெற்றார்கள்.
8யெகோவா மோசேயின் மூலம் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேல் மக்கள் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
9யூதா, சிமியோன் கோத்திரங்களின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட பெயர்களின்படி பட்டணங்களாவன: 10ஆரோனின் வழித்தோன்றல்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் இப்பட்டணங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவர்கள் லேவி கோத்திரத்தில் கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
11இவ்விதமாக இஸ்ரயேலர் யூதாவின் மலைநாட்டிலுள்ள எப்ரோனையும் அதாவது கீரியாத் அர்பா அதைச் சுற்றியிருந்த மேய்ச்சல் நிலத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். அர்பா என்பவன் ஏனாக்கியரின் முற்பிதா. 12ஆனால் அந்நகரைச் சுற்றியிருந்த வெளிநிலங்களையும், கிராமங்களையுமோ எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்கள். 13இவ்வாறு ஆசாரியனான ஆரோனின் சந்ததிகளுக்கு கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமாயிருந்த எப்ரோனைக் கொடுத்தார்கள். லிப்னா, 14யாத்தீர், எஸ்தெமோவா, 15ஓலோன், தெபீர், 16ஆயின், யுத்தா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களையும் அத்துடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள். யூதா, சிமியோன் கோத்திரத்திலிருந்து எல்லாமாக ஒன்பது பட்டணங்கள் வழங்கப்பட்டன.
17பென்யமீன் கோத்திரத்தின் பங்கிலிருந்து
கிபியோன், கேபா, 18ஆனதோத், அல்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தான்.
19ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியருக்கு மொத்தம் பதின்மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
20லேவியரான கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்த பிறருக்கு எப்பிராயீம் கோத்திரத்தின் பங்கிலிருந்து பட்டணங்கள் வழங்கப்பட்டன.
21எப்பிராயீம் மலைநாட்டில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு
அடைக்கலப் பட்டணமாயிருந்த சீகேம், கேசேர், 22கிப்சாயீம், பெத் ஓரோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
23அதோடு தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து
எல்தெக்கே, கிபெத்தோன், 24ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள்.
25மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து
தானா, காத்ரிம்மோன் ஆகிய இரு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள்.
26மேற்கூறிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கோகாத்தியரின் வம்சங்களில் எஞ்சியோருக்கு வழங்கப்பட்டன.
27லேவி கோத்திரத்தின் கெர்சோன் வம்சத்தினருக்கு
மனாசேயின் அரைக் கோத்திரத்திலிருந்து பாசானிலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான
கோலானும், பெயெஷ்தெராவுமான இரு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
28இசக்கார் கோத்திரத்தின் பங்கிலிருந்து
கிசோயோன் தாபேராத், 29யர்மூத், என்கன்னீம் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
30ஆசேர் கோத்திரத்தின் பங்கிலிருந்து
மிஷாயால், அப்தோன், 31எல்காத், ரேகோப் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
32நப்தலி கோத்திரத்திலிருந்து
கலிலேய பிரதேசத்தில் உள்ள கொலைக்குற்றம் சாட்டப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான கேதேஷ், அமோத்தோர், கர்தான் ஆகிய மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
33கெர்சோனிய வம்சங்களுக்கு மேய்ச்சல் நிலங்களோடு வழங்கப்பட்ட பட்டணங்கள் எல்லாம் பதின்மூன்றாக இருந்தன.
34மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச்
செபுலோன் கோத்திரத்திலிருந்து
யொக்னீம், கர்தா, 35திம்னா, நகலால் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
36ரூபனின் கோத்திரத்திலிருந்து
பேசேர், யாகாசா, 37கெதெமோத், மேபாகாத் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
38காத் கோத்திரத்திலிருந்து
கீலேயாத்திலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான ராமோத், மகனாயீம் 39எஸ்போன், யாசேர் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
40லேவி கோத்திரத்தின் எஞ்சிய பகுதியினரான மெராரியர் வம்சங்களுக்கு வழங்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.
41இஸ்ரயேலரிடம் இருந்த நிலப்பரப்பில், மேய்ச்சல் நிலத்தோடு லேவியருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை எல்லாமாக நாற்பத்தெட்டாக இருந்தது. 42வழங்கப்பட்ட பட்டணங்கள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. எல்லாப் பட்டணங்களும் அவ்வாறே அமைந்திருந்தன.
43இவ்விதமாய் யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த எல்லா நிலங்களையும் இஸ்ரயேலருக்கு வழங்கினார். அவர்கள் அந்த நிலத்தை உரிமையாக்கி அங்கே குடியேறினார்கள். 44யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர்களுக்கு நாற்புறமும் அமைதியைக் கொடுத்தார். அவர்களின் எதிரிகளில் ஒருவராயினும் அவர்களை எதிர்த்துநிற்க முடியவில்லை. ஏனெனில் எதிரிகள் அனைவரையும் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்படைத்தார். 45இஸ்ரயேலருக்கு யெகோவா வழங்கிய நல்வாக்குத்தத்தங்களில் ஒன்றாயினும் தவறிப்போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டன.
Currently Selected:
யோசுவா 21: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.