சங்கீதம் 118
118
சங்கீதம் 118
1யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
2“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
இஸ்ரயேலர் சொல்வார்களாக.
3“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.
4“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.
5நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து,
விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.
6யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
7யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்;
என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன்.
8மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
9அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
10எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன்.
11அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்;
ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன்.
12அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்;
யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன்.
13நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்;
ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
14யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்;
அவரே எனக்கு இரட்சிப்புமானார்.
15நீதிமான்களின் கூடாரங்களில்,
வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன:
“யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது.
16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;
யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.”
17நான் வாழுவேன், சாகமாட்டேன்.
நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன்.
18யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார்,
ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
19நீதியின் வாசல்களை#118:19 நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல். எனக்காகத் திறவுங்கள்;
நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.
20இதுவே யெகோவாவின் வாசல்;
நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.
21நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
என் இரட்சிப்பு நீரே.
22வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
23யெகோவாவே இதைச் செய்தார்,
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
24யெகோவா உண்டாக்கின நாள் இதுவே;
இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
25யெகோவாவே, எங்களை இரட்சியும்;
யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.
26யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்;
யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27யெகோவாவே இறைவன்,
அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்;
பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு,
பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி
ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.
28நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்;
நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.
29யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Currently Selected:
சங்கீதம் 118: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.