YouVersion Logo
Search Icon

சங்கீதம் 16

16
சங்கீதம் 16
மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.
1இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்,
ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன்.
2நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா;
உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன்.
3நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள்
என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.”
4பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும்.
இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்;
அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன்.
5யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்;
எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர்.
6எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன;
நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு.
7எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்;
இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது.
8யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.
9ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது;
என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும்.
10ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்;
உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர்.
11வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்;
உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும்,
உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for சங்கீதம் 16