YouVersion Logo
Search Icon

சங்கீதம் 91

91
சங்கீதம் 91
1மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,
எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
2நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை,
நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன்.
3நிச்சயமாகவே அவர் உன்னை
வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
4யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;
அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்;
அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.
5நீ இரவின் பயங்கரத்திற்கும்,
பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.
6இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும்,
நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.
7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும்,
உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும்,
அது உன்னை நெருங்காது.
8உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து,
கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய்.
9“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால்,
மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,
10அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது;
கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.
11அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,
உன்னைக்குறித்து தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார்;
12உன் பாதம் கல்லில் மோதாதபடி,
அவர்கள் உன்னைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்.
13நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்;
இளஞ்சிங்கத்தையும் பாம்பையும் மிதிப்பாய்.
14யெகோவா இப்படியாக சொல்கிறார்:
“அவன் என்னை நேசிக்கிறபடியால், நான் அவனை விடுவிப்பேன்;
அவன் என் பெயரை அறிந்திருக்கிறபடியால், நான் அவனைப் பாதுகாப்பேன்.
15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்;
துன்பத்தில் நான் அவனோடிருந்து,
அவனை விடுவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
16நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி,
என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 91