YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 27

27
படைக் குழுக்கள்
1ராஜாவின் படையில் பணியாற்றும் இஸ்ரவேல் ஜனங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு மாதத்தில் பணியாற்றினார்கள். அவர்களில் குடும்பத் தலைவர்களும், தளபதிகளும், படைத்தலைவர்கள், காவல் வீரர்களும் இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 24,000 பேர் இருந்தனர்.
2முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் குமாரன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். 3யஷொபெயாம், பேரேசின் சந்ததியாரில் ஒருவன். இவன் முதல் மாதத்திற்குரிய அனைத்து படைத்தலைவர்களுக்கும் தலைவன்.
4இரண்டாவது மாதப் படைக் குழுவிற்குத் தோதாயி பொறுப்பாளி. இவன் அகோகியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
5மூன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் மூன்றாவது மாதத்தின் பொறுப்பாளி. பெனாயா யோய்தாவின் குமாரன். யோய்தா தலைமை ஆசாரியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். 6பெனாயா 30 நாயகர்களில் ஒருவனாகவும், அவர்களின் தலைவனுமாகவும் இருந்தான். பெனாயாவின் குழுவிற்கு அவனது குமாரனான அமிசபாத் பொறுப்பாளியாயிருந்தான்.
7ஆசகேல் நான்காவது தளபதி ஆவான். இவன் நான்காவது மாதத்திற்கு பொறுப்பாளி. இவன் யோவாபின் சகோதரன். பின்பு ஆசகேலின் குமாரனான செபதியா இவனது பதவியை வகித்தான். ஆசகேலின் குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
8சம்கூத் ஐந்தாவது தளபதி ஆவான். இவன் ஐந்தாவது மாதத்திற்குரியவன். இவன் இஸ்ராகியின் வம்சத்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
9ஆறாவது தளபதி ஈரா ஆவான். இவன் ஆறாவது மாதத்திற்குரியவன். இவன் இக்கேசின் குமாரன். இக்கேசுதெக்கோவியா நாட்டினன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
10ஏழாவது தளபதி ஏலேஸ் ஆவான். இவன் ஏழாவது மாதத்திற்குரியவன். இவன் எப்பிராயீம் சந்ததியிலிருந்து வந்தவன். பெலேனிய நாட்டவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
11எட்டாவது தளபதி சிபெக்காயி ஆவான். இவன் எட்டாவது மாதத்திற்குரியவன். இவன் ஊஷாத்தியன். இவன் சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
12ஒன்பதாவது தளபதி அபியேசர் ஆவான். இவன் ஒன்பதாவது மாதத்திற்குரியவன். இவன் ஆனதோத் நகரத்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
13பத்தாவது தளபதி மக்ராயி ஆவான். இவன் பத்தாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன். சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
14பதினொன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் பதினொன்றாவது மாதத்திற்குரியவன். இவன் பிரத்தோனியன், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
15பன்னிரெண்டாவது தளபதி எல்தாயி. இவன் பன்னிரெண்டாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன், ஒத்னியேல் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
கோத்திரங்களின் தலைவர்கள்
16இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு:
ரூபனியருக்கு சிக்ரியின் குமாரனான எலியேசர் தலைவன்.
சிமியோனியருக்கு மாக்காவின் குமாரனான செப்பத்தியா தலைவன்.
17லேவியருக்கு கேமுவேலின் குமாரனான அஷாபியா தலைவன்.
ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.
18யூதாவுக்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனான எலிகூ தலைவன்.
இசக்காருக்கு மிகாவேலின் குமாரனான ஒம்ரி தலைவன்.
19செபுலோனக்கு ஒபதியாவின் குமாரனான இஸ்மாயா தலைவன்.
நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரனான எரிமோத் தலைவன்.
20எப்பிராயீமியருக்கு அசசியாவின் குமாரனான ஓசெயா தலைவன்.
மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குப் பெதாயாவின் குமாரனான யோவேல் தலைவன்.
21கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரனான இத்தோ தலைவன்.
பென்யமீனுக்கு அப்னேரின் குமாரனான யாசியேல் தலைவன்.
22எரோகாமின் குமாரனான அசாரியேல் தாணின் தலைவன்.
இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள்.
தாவீது இஸ்ரவேலர்களை எண்ணிக் கணக்கிட்டது
23தாவீது, இஸ்ரவேலர்களில் ஆண்களைக் கணக்கிட திட்டமிட்டான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஏனென்றால் தேவன், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போன்று பெருக்குவதாக வாக்களித்திருந்தார். எனவே தாவீது இஸ்ரவேலர்களில் இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட்டான். 24செருயாவின் குமாரனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத் தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான், தாவீது ராஜாவின் வரலாறு, என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை.
ராஜாவின் நிர்வாகிகள்
25ராஜாவின் சொத்துக்களை நிர்வகித்தவர்களின் பட்டியல் இது:
ராஜாவின் பொக்கிஷங்களுக்கு ஆதியேலின் குமாரனான அஸ்மாவேத் அதிகாரியானான்.
சிறிய பட்டணங்கள், கிராமங்கள், கோபுரங்கள் போன்றவற்றின் பொக்கிஷங்களுக்கு உசியாவின் குமாரன் யோனத்தான் அதிகாரியானான்.
26நிலத்தைப் பயிரிடும் வயல்வெளிகளில் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் குமாரன் எஸ்ரி அதிகாரியானான்.
27திராட்சைத் தோட்டங்களுக்கு ராமாத்தியனான சீமேயும், திராட்சைரசம் வைக்கும் இடங்களுக்கு சிப்மியனாகிய சப்தியும் அதிகாரிகளானார்கள்.
28மேற்கு மலை நாடுகளிலுள்ள ஒலிவ மரங்களுக்கும், ஆலமரங்களுக்கும் கெதேரியனான பால் கானான் அதிகாரியானான்.
எண்ணெய் கிடங்குகளுக்கு யோவாசு அதிகாரியானான்.
29சாரோனில் மேய்கிற மாடுகளுக்கு சரோனியனான சித்ராய் அதிகாரியானான்.
பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளுக்கு அத்லாயின் குமாரன் சாப்பாத் அதிகாரியானான்.
30ஒட்டகங்களுக்கு இஸ்மவேலியனான ஓபில் அதிகாரியானான்.
கழுதைகளுக்கு மெரோனோத்தியனாகிய எகெதியா அதிகாரியானான்.
31ஆடுகளுக்கு ஆசாரியனான யாசிசு அதிகாரியானான்.
இவர்கள் அனைவரும் தாவீதின் உடமைகளுக்கு அதிகாரிகளாய் இருந்தனர்.
32யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் குமாரனான யெகியேல் ராஜாவின் குமாரர்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான். 33அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி ராஜாவின் நண்பன். இவன் அர்கியன். 34யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலின் பதவியைப் பெற்று ராஜாவுக்கு ஆலோசனை கூறினார்கள். யோய்தா பெனாயாவின் குமாரன். யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 27