YouVersion Logo
Search Icon

நெகேமியாவின் புத்தகம் 11

11
புதிய மக்கள் எருசலேமிற்குள் நுழைகின்றனர்
1இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் இப்பொழுது எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் இனி நகரத்திற்குள் யார் நுழையவேண்டும் என்று முடிவெடுத்தனர். எனவே அவர்கள் சீட்டு குலுக்கிப்போட்டனர். தங்களுக்குள் பத்து பேரில் ஒருவனைப் பரிசுத்த நகரமான எருசலேமில் வாழவைத்தனர். மற்ற ஒன்பது பேர் அவர்களது சொந்தப் பட்டணங்களில் வாழ முடிந்தது. 2சில ஜனங்கள் எருசலேமில் குடியிருக்கத் தாமாகவே முன்வந்தனர். மற்ற ஜனங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினர்.
3எருசலேமில் குடியிருந்த தலைவர்கள் இத்தகையவர்கள். (இஸ்ரவேல் ஜனங்களில் சிலர் ஆசாரியர்கள், லேவியர்கள், ஆலயப் பணியாளர்கள், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர். இவர்கள் யூதாவின் நகரங்களில் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான வெவ்வேறு பட்டணங்களில் வாழ்ந்தனர். 4எருசலேம் நகரத்தில் யூதா மற்றும் பென்யமீன் குடும்பத்தினரில் மற்ற ஜனங்கள் வாழ்ந்தனர்).
யூதாவின் சந்ததியினர் இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்தனர்.
உசியாவின் குமாரனான அத்தாயாவும், (உசியா சகரியாவின் குமாரன், அவன் அமரியாவின் குமாரன், அவன் செபதியாவின் குமாரன், அவன் மகலாலெயேலின் குமாரன், அவன் பேரேசின் சந்ததியில் ஒருவன்). 5பாருக்கின் குமாரனான மாசெயாவும், (பாருக் கொல்லோசேயின் குமாரன், அசாயாவின் குமாரன் கொல்லோசே, அதாயாவின் குமாரன் அசாயா, யோயாரிப்புவின் குமாரன் அதாயா. யோயாரிப்பு சகரியாவுக்கு குமாரன் அவன் சீலோனின் சந்ததியில் ஒருவன்). 6எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள்.
7இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த பென்யமீனின் சந்ததியினர்:
மெசுல்லாமின் குமாரனான சல்லூ (மெசுல்லாம் யோயத்தின் குமாரன், இவன் பெதாயாவுக்கு குமாரன், இவன் கொலாயாவுக்கு குமாரன், இவன் மாசெயாவுக்கு குமாரன், இவன் இதியேலுக்கு குமாரன், இவன் எசாயாவுக்கு குமாரன்) 8எசாயாவைப் பின்பற்றியவர்கள் கப்பாய், சல்லாய் ஆகியோர் அவர்கள் அனைவரும் சேர்ந்து 928 பேர். 9அவர்களுக்கு சிக்ரியின் குமாரன் யோவேல் பொறுப்பாளனாக இருந்தான். எருசலேம் பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்துக்கு செனுவாவின் குமாரனான யூதா பொறுப்பாளனாக இருந்தான்.
10இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த ஆசாரியர்கள்:
யோயாரிப், யாகின் குமாரன். 11இல்க்கியாவின் குமாரனான செராயா (இல்க்கியா மெசுல்லாமின் குமாரன், அவன் சாதோக்கின் குமாரன், அவன் மொராயோத்தின் குமாரன், அவன் அகிதூபின் குமாரன், இவன் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளன்.) 12சகோதரர்களாகிய 822 பேர் ஆலயத்தில் பணிவிடைச் செய்தனர். எரோகாமுக்கு குமாரனான அதாயாவும் (எரோகாம் பெல்லியாவின் குமாரன், அவன் அம்சியின் குமாரன், அவன் சகரியாவின் குமாரன், அவன் பஸ்கூரின் குமாரன், அவன் மல்கியாவின் குமாரன்). 13மல்கியாவின் சகோதரர்களான 242 பேர் (இவர்கள் அவர்களது குடும்பத் தலைவர்கள்.) அசரியேலின் குமாரனான அமாசாயும் (அசரியேல் அகெசாயின் குமாரன், அவன் மெசில்லேமோத்தின் குமாரன், அவன் இம்மோரின் குமாரன்.) 14இம்மோரின் சகோதரர்களான 128 பேர். (இவர்கள் தைரியமான வீரர்கள். இவர்களின் அதிகாரியாக அகெதோலிமின் குமாரனான சப்தியேல் இருந்தான்.)
15எருசலேமிற்குள் நுழைந்த லேவியர்கள் இவர்கள்:
அசூபின் குமாரனான செமாயா (அசூப் அஸ்ரிக்காமின் குமாரன், அவன் அசபியாவின் குமாரன், அவன் புன்னியின் குமாரன்.) 16சபெதாயும், யோசபாத்தும் (இவ்விருவரும் லேவியர்களின் தலைவர்கள் தேவாலயத்தின் வெளிவேலைகளின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.) 17மத்தனியா (மத்தனியா மீகாவின் குமாரன். அவன் சப்தியின் குமாரன். அவன் ஆசாபின் குமாரன். அவன் பாடகர்கள் குழுவுக்கு இயக்குனர். ஜெபத்தில் துதிப்பாடலை பாட ஜனங்களை வழிநடத்தினான்.) பக்பூக்கியா (பக்பூக்கியா அவனது சகோதரனுக்கு மேல் இரண்டாவது பொறுப்பாளனாக இருந்தான்.) சமுவாவின் குமாரனான அப்தா (சம்முவா, கலாலின் குமாரன் அவன் எதுத்தூனின் குமாரன்). 18எனவே 284 லேவியர்கள் பரிசுத்த நகரமான எருசலேமிற்குள் நுழைந்தனர்.
19எருசலேமிற்குள் நுழைந்த வாசல்காவலர்கள்:
அக்கூப், தல்மோன் மற்றும் 172 சகோதரர்கள். நகரத்தின் வாசல்களை அவர்கள் காவல் காத்தனர்.
20மற்ற இஸ்ரவேல் ஜனங்கள், மற்ற ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்தனர். ஒவ்வொருவனும் தனது முற்பிதாவிற்குச் சொந்தமான நாட்டில் வாழ்ந்தனர். 21ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்களின் மேல் சீகாவும், கிஸ்பாவும் அதிகாரிகளாக இருந்தார்கள்.
22எருசலேமில் லேவியர்களின் அதிகாரியாக ஊசி இருந்தான். ஊசி பானியின் குமாரனாக இருந்தான். (பான் அசபியாவின் குமாரனாக இருந்தான், அவன் மத்தானியாவின் குமாரனாக இருந்தான், அவன் மீகாவின் குமாரனாக இருந்தான்.) ஊசி ஆசாபின் சந்ததியான். ஆசாபின் சந்ததியினர் பாடகர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிப் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர். 23பாடகர்கள் ராஜாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருந்தனர். ராஜாவிடமிருந்து வரும் ஆணைகள் அப்பாடகர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லின. 24ராஜா செய்ய விரும்புவதை ஜனங்களிடம் சொல்பவனின் பெயர் பெத்தகியா. (பெத்தகியா மெசெசாபெயேலின் குமாரன். அவன் சேராக்கின் சந்ததியில் ஒருவன். சேராக் யூதாவின் குமாரன்.)
25இப்பட்டணங்களில் யூதாவின் ஜனங்கள் வாழ்ந்தனர். கீரியாத் அர்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தீபோனிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 26யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், 27ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதன் கிராமங்களிலும், 28சிக்லாகிலும், மேகோனாகிலும் அதன் கிராமங்களிலும் 29என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும், 30சானோவாகிலும், அதுல்லாமிலும் அவற்றின் கிராமங்களிலும், லாகீசிலும் அதன் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதன் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமீன் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
31கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும், 32ஆனதோத், நோப், அனனியா, 33ஆத்சோர், ராமா, கித்தாயிம், 34ஆதீத், செபோயிம், நெபலாத், 35லோத், ஓனோ, என்னும் ஊர்களிலும், சிற்பிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர். 36லேவியரிலோ சிலப் பிரிவினர் பென்யமீனிலும் இருந்தனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நெகேமியாவின் புத்தகம் 11