யோவான் 15
15
திராட்சை செடியும் கிளைகளும்
1“நானே உண்மையான திராட்சை செடி. என் பிதாவே தோட்டக்காரர். 2என்னிலுள்ள கனி கொடாத ஒவ்வொரு கிளையையும் அவர் வெட்டிப் போடுகிறார். ஆனால், கனி கொடுக்கின்ற கிளைகளையோ, அவை இன்னும் அதிகமாய் கனி கொடுக்கும்படி, கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார். 3நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் ஏற்கெனவே சுத்திகரிக்கப்பட்டிருக்கிறீர்கள். 4என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் சுயமாகவே கனி கொடுப்பதில்லை; அது திராட்சைச் செடியில் நிலைத்திருக்க வேண்டும். நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் உங்களால் கனி கொடுக்க இயலாது.
5“நானே திராட்சை செடி, நீங்களோ கிளைகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் அதிகமாய் கனி கொடுப்பான்; என்னையன்றி உங்களால் எதுவுமே செய்ய முடியாது. 6எவனாவது என்னில் நிலைத்திராவிட்டால், அவன் வெட்டி எறியப்பட்டு வாடிப் போகின்ற ஒரு கிளையைப் போல் இருப்பான்; அப்படிப்பட்ட கிளைகள் சேர்த்து எடுக்கப்பட்டு, நெருப்பில் போட்டு எரிக்கப்படும். 7நீங்கள் என்னில் நிலைத்திருந்து, என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்குமானால், நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அது உங்களுக்குக் கொடுக்கப்படும். 8நீங்கள் அதிகமாய் கனி கொடுத்து, என்னுடைய சீடர்கள் எனக் காண்பியுங்கள். இதுவே என் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும்.
9“பிதா என்னில் அன்பாயிருப்பதைப் போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். இப்போது நீங்கள் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். 10நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறேன். அதுபோல நீங்களும் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். 11என்னுடைய மனமகிழ்ச்சி உங்களில் இருக்கும்படியாகவும், உங்களுடைய மனமகிழ்ச்சி முழுமை அடையவுமே இதை நான் உங்களுக்குச் சொல்கின்றேன். 12நான் உங்களில் அன்பாயிருப்பதைப் போலவே, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்; இதுவே என்னுடைய கட்டளை. 13ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு எவரிடத்திலும் இல்லை. 14நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்தால், நீங்கள் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள். 15நான் இனிமேலும் உங்களைப் பணியாட்கள் என்று சொல்லப் போவதில்லை. ஏனெனில் ஒரு பணியாள் தன் எஜமானுடைய வேலைகளை அறிய மாட்டானே. நானோ உங்களை நண்பர்கள் என்றே சொல்கின்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். 16நீங்கள் என்னைத் தெரிவு செய்யவில்லை. நானே உங்களைத் தெரிவு செய்திருக்கின்றேன்; நீங்கள் போய் நிலையான கனி கொடுக்கும்படி உங்களை நியமித்தேன். நீங்கள் போய் நிரந்தரமான கனி கொடுங்கள். அப்போது நீங்கள் என் பெயரில் பிதாவிடம் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார். 17ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். இதுவே என் கட்டளை.”
உலகம் சீடர்களை வெறுத்தல்
18“உலகம் உங்களை வெறுக்கும்போது, முதலில் அது என்னையே வெறுத்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 19நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்களாய் இருந்தால், அது உங்களைத் தன்னுடையவர்களென்று ஏற்று, உங்களில் அன்பாயிருக்கும். ஆனால், நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்து வேறு பிரித்தேன். அதனாலேயே உலகம் உங்களை வெறுக்கிறது. 20நான் உங்களுடன் பேசிய வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: ‘எந்த வேலையாளும் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல.’#15:20 யோவா. 13:16 அவர்கள் என்னைத் துன்புறுத்தினால், உங்களையும் துன்புறுத்துவார்கள். அவர்கள் என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், உங்களுடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவார்கள். 21அவர்கள் என்னை அனுப்பியவரை அறியாமல் இருக்கின்றார்கள். அதனாலேயே என் பெயரின் பொருட்டு உங்களைத் துன்புறுத்துவார்கள். 22நான் வந்து அவர்களுடனே பேசியிருக்காவிட்டால், பாவத்தின் குற்றம் அவர்கள்மீது சுமத்தப்பட மாட்டாது. ஆயினும் இப்பொழுதோ தங்கள் பாவத்தைக் குறித்து அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. 23என்னை வெறுக்கிறவன் என் பிதாவையும் வெறுக்கிறான். 24வேறு யாரும் செய்திராத அற்புதங்களை நான் அவர்கள் மத்தியில் செய்தேனே. அப்படி நான் செய்திராவிட்டால் அவர்கள்மீது பாவத்தின் குற்றம் சுமத்தப்பட மாட்டாது. ஆனால் இப்பொழுதோ அவர்கள் இந்த அற்புதங்களைக் கண்டிருந்தும், என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். 25‘அவர்கள் காரணமின்றி என்னை வெறுக்கிறார்கள்’ என்று அவர்களுடைய நீதிச்சட்டத்தில் எழுதப்பட்டிருப்பது நிறைவேறும்படியே இப்படி நடந்தது.”#15:25 சங். 35:19; 69:4
பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
26“நான் பிதாவினிடத்திலிருந்து உங்களிடத்திற்கு அனுப்பும் உறுதுணையாளர் உங்களிடம் வருவார். அப்போது பிதாவினிடத்திலிருந்து புறப்படும் உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர், என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார். 27நீங்களும் என்னைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தொடக்கத்திலிருந்து என்னுடன் இருக்கின்றீர்களே.”
Zur Zeit ausgewählt:
யோவான் 15: TRV
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.