எரே 19
19
அத்தியாயம் 19
1யெகோவா சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக் கொண்டு, மக்களின் மூப்பரிலும், ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு, 2கிழக்கு வாசலுக்கு முன்பான இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கில் புறப்பட்டுப்போய், நான் உன்னுடன் சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து. 3நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, யெகோவாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: இதோ, நான் இந்த இடத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரச்செய்வேன்; அதைக் கேட்கிற அனைவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். 4அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த இடத்தை அந்நிய இடமாக்கி, தாங்களும், தங்கள் முற்பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தெய்வங்களுக்கு அதில் தூபங்காட்டி, இந்த இடத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினால் நிரப்பினதினாலும், 5தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிப்பதற்கு பாகாலின் மேடைகளைக் கட்டினதினாலும் இப்படி வரச்செய்வேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. 6ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த இடம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும். 7அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த இடத்தில் வெறுமையாக்கி, அவர்கள் எதிரிகளுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழச்செய்து, அவர்கள் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்து, 8இந்த நகரத்தை அழிக்கவும் சத்தமிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் சத்தமிடுவான். 9அவர்களுடைய எதிரிகளும் அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றுகையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் மகன்களின் மாம்சத்தையும் தங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச்செய்வேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தை சாப்பிடுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று நீ சொல்லி, 10உன்னுடன் கூடவந்த மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு, 11அவர்களை நோக்கி: திரும்பச் சரிசெய்யமுடியாத குயவனுடைய மண்பாத்திரத்தை உடைத்துப்போட்டவிதமாக, நான் இந்த மக்களையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்தில் சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12இவ்விதமாக நான் இந்த இடத்திற்கும் இதின் குடிமக்களுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்திற்குச் சரியாக்குவேன். 13எந்த வீடுகளின்மேல் வானத்தின் எல்லா சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற இடத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாக இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். 14பின்பு எரேமியா, யெகோவா தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருந்து வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, எல்லா மக்களையும் பார்த்து: 15இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமல் உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினதினால் நான் இந்த நகரத்திற்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதைச் சுற்றியுள்ள பட்டணங்களின்மேலும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எரே 19: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.