யோபு 10

10
அத்தியாயம் 10
1என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது,
நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து,
என் மனவேதனையினாலே பேசுவேன்.
2நான் தேவனை நோக்கி:
என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்;
நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து,
துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
4சரீரக்கண்கள் உமக்கு உண்டோ?
மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ?
5நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து,
என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
6உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும்,
உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ?
7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்;
உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை.
8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும்,
என்னை அழிக்கிறீர்.
9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும்,
என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும்.
10நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ?
11தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
12எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;
உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது.
13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும்,
இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
14நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து,
என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர்.
15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ,
நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்;
அவமானத்தால் நிரப்பப்பட்டேன்;
நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி,
எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர்.
17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்;
என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கச் செய்கிறீர்;
போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன?
ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே.
19நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல்,
கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன்.
20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
21காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும்,
இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே,
22நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோபு 10: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்