யோசு 7
7
அத்தியாயம் 7
ஆகானின் பாவம்
1இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது யெகோவாவுடைய கோபம் மூண்டது. 2யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து, 3யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். 4அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள். 5ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்#7:5 கல்லுகள் உடைக்கும் இடம்.வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது. 6அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். 7யோசுவா: ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தான் நதியைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும். 8ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். 9கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான். 10அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? 11இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே. 12ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன். 13எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். 14காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது யெகோவா குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல். 15அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார். 16யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. 17அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான். 18அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். 19அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான். 20அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன். 21கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளிச் சேக்கலையும், 550 கிராம் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான். 22உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின் கீழ் இருந்தது. 23அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, யெகோவாவுடைய சமூகத்தில் வைத்தார்கள். 24அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள். 25அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று யெகோவா உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; 26அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே யெகோவா தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர்#7:26 அதிக வியாகுலம் பள்ளத்தாக்கு என்னப்படும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோசு 7: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.