சங் 19

19
சங்கீதம் 19
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,
ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
2பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,
அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன;
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
5அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,
பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,
அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது;
அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
7யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும்,
ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும்,
பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.
8யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும்,
இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.
9யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,
என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும்,
அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.
10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும்,
தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.
11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;
அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
12தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்?
மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
13துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்;
அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்;
அப்பொழுது நான் உத்தமனாகி,
பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.
14என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,
என் வாயின் வார்த்தைகளும்,
என் இருதயத்தின் தியானமும்,
உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 19: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்