சங்கீதம் 7

7
சங்கீதம் 7
பென்யமீனியனான கூஷின் வார்த்தையின் நிமித்தம் தாவீது யெகோவாவுக்கு பாடிய சிகாயோன் என்னும் சங்கீதம்.
1என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்;
என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும்.
2இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து,
என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள்.
3என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து
என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால்,
4என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால்,
அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால்,
5அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்;
அவன் என்னைத் தரையில் தள்ளி,
உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும்.
6யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்;
என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும்.
என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும்.
7எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து
நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும்.
8யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும்.
யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்;
மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும்.
9சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற
நீதியுள்ள இறைவனே,
கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்;
நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும்.
10மகா உன்னதமான இறைவனே என் கேடயம்;
இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார்.
11இறைவன் நீதியுள்ள நீதிபதி;
அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன்.
12கொடியவன் மனம் மாறாவிட்டால்,
இறைவன் தமது வாளைக் கூராக்குவார்;
அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார்.
13அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்;
எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார்.
14தீமையினால் நிறைந்தவர்களோ
பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
15மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ,
தாங்களே அதற்குள் விழுகிறார்கள்.
16அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது;
அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது.
17யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்;
மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 7: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்