செப்பனியா 3:10-20

செப்பனியா 3:10-20 TCV

எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால் இருக்கிற என்னை ஆராதிக்கிறவர்களான, சிதறுண்ட என் மக்கள், எனக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற அனைவரையும் இந்த பட்டணத்திலிருந்து அகற்றிப்போடுவேன். அதனால் நீங்கள் எனக்குச் செய்த எல்லா அநியாயங்களுக்காகவும் நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள். இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில் நீங்கள் அகந்தையுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்கள். எனினும் யெகோவாவின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கிற, சாந்தகுணமுள்ளோரையும், தாழ்மையுள்ளோரையும் உன் பட்டணத்தின் நடுவில் மீதியாக விட்டுவைப்பேன். இஸ்ரயேலில் மீந்திருப்போர் அநியாயம் செய்யமாட்டார்கள்; அவர்கள் பொய் பேசமாட்டார்கள்; அவர்களின் வாயில் வஞ்சகம் காணப்படுவதுமில்லை. அவர்கள் சாப்பிட்டு படுத்திருப்பார்கள். ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள். சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே, பலமாய்ச் சத்தமிடு; எருசலேம் மகளே, உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூரு. யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார், அவர் உன் பகைவரைத் துரத்திவிட்டார். இஸ்ரயேலின் அரசனாகிய யெகோவாவே உன்னுடன் இருக்கிறார்; நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்படமாட்டாய். அந்த நாளில் அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது, “சீயோனே, பயப்படாதே; உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே. உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னை இரட்சிக்க வல்லவர். உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார். அவர் தம்முடைய அன்பினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார். அவர் உன்னைக்குறித்துப் பாடல்களுடன் மகிழ்வார்.” “நியமிக்கப்பட்ட உங்கள் பண்டிகைகளை இழந்ததால் நீங்கள் அடைந்த துக்கத்தை, நான் உங்களைவிட்டு நீக்குவேன். அவை உங்களுக்குப் பாரமாயும் நிந்தையாயும் இருக்கின்றன. அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய அனைவரையும் நான் தண்டிப்பேன். முடமானவர்களைத் தப்புவித்துச் சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன். அவர்கள் வெட்கத்திற்குள்ளான நாடுகளில் எல்லாம் அவர்களுக்குப் புகழ்ச்சியையும், மேன்மையையும் கொடுப்பேன். அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; அக்காலத்தில் நான் உங்களை உங்கள் வீட்டிற்குக் கொண்டுவருவேன். உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் இழந்த செல்வங்களையும் நாடுகடத்தப்பட்டு வந்த மக்களையும் நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அப்போது பூமியின் மக்கள் அனைவருக்குள்ளும் உங்களுக்குப் புகழ்ச்சியையும், மேன்மையையும் கொடுப்பேன் என யெகோவா சொல்கிறார்.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த செப்பனியா 3:10-20