ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 5:1-11

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 5:1-11 TAERV

இப்பொழுது, நான் எனது நண்பருக்காக (தேவன்) ஒரு பாடல் பாடுவேன். இப்பாடல் என் நண்பர் திராட்சைத் தோட்டத்தின் (இஸ்ரவேல்) மேல் வைத்த அன்பைப்பற்றியது. எனது நண்பருக்கு வளமான வெளியில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. எனது நண்பர் அதனைச் சுத்தப்படுத்தினார். அதில் சிறந்த திராட்சைக் கொடிகளை நட்டார். அதன் நடுவில் ஒரு கோபுரம் அமைத்தார். அதில் நல்ல திராட்சை வளரும் என்று நம்பினார் ஆனால் அதில் கெட்ட திராட்சைகளே இருந்தன. எனவே தேவன் சொன்னார், “எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள். எனது திராட்சைத் தோட்டத்திற்காக நான் இன்னும் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்தவற்றை நான் செய்துவிட்டேன். நல்ல திராட்சை வளரும் என்று நம்பினேன். ஆனால் கெட்ட திராட்சைகளே உள்ளன. ஏன் இவ்வாறு ஆயிற்று? இப்பொழுது, எனது திராட்சைத் தோட்டத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வேன். நான் முட்புதர்களை விலக்குவேன். அவை வயலைக் காக்கின்றன. அவற்றை எரித்துப்போடுவேன். கற்சுவர்களை இடித்துப்போடுவேன். அது மிதியுண்டு போகும். என் திராட்சைத் தோட்டத்தை காலியாக வைப்பேன். எவரும் கொடிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். எவரும் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்கள். முட்களும், புதர்களும் வளரும். தோட்டத்தில் மழைபொழியவேண்டாம் என்று நான் மேகங்களுக்குக் கட்டளை இடுவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கான திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கும். கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் செடியானது யூதாவின் ஜனங்களே. கர்த்தர் நியாயத்துக்குக் காத்திருந்தார். ஆனால் கொலைகளே நடைபெற்றன. கர்த்தர் நீதிக்காகக் காத்திருந்தார். ஆனால் அழுகைகளே இருந்தன. மோசமாக நடத்தப்பட்வர்கள் முறையிட்டார்கள். ஜனங்களாகிய நீங்கள் மிக நெருங்கி வாழ்கிறீர்கள். வேறு எவருக்கும் இடமில்லாதபடி உங்கள் வீடுகளை கட்டுங்கள். ஆனால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். உங்களைத் தனித்து வாழும்படி செய்வார். முழு நாட்டில் நீங்கள் மட்டும் தனியாக வாழுவீர்கள்! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதை என்னிடம் சொன்னார். அவர் அவரிடம், “இப்பொழுது ஏராளமான வீடுகள் உள்ளன. உறுதியாகச் சொல்கிறேன், எல்லா வீடுகளும் அழிக்கப்படும். இப்பொழுது அழகான பெரிய வீடுகள் உள்ளன. ஆனால் அவை காலியாகிப்போகும். அப்போது, பத்து ஏக்கர் அளவுள்ள பெரிய திராட்சைத் தோட்டம் குறைந்த திராட்சை ரசத்தை தரும். பல மூட்டை நிறைந்த விதைகள் சிறிய அளவு தானியங்களையே விளைவிக்கும்.” ஜனங்களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, மதுபானம் குடிக்கப்போகிறீர்கள். இரவு நெடுநேரம் தூங்காமல் மதுவைக் குடித்து களிக்கிறீர்கள்.