கொலோசெயர் 1:25-29

கொலோசெயர் 1:25-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையை முழுமையாக அறிவிக்கும்படிக்கு, இறைவன் எனக்குக் கொடுத்த பொறுப்பினாலே நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன். அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரகசியத்தை, யூதரல்லாதவர்களின் நடுவிலும் வெளிப்படுத்துகிறார் என்பதை தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தவே இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து உங்களுக்குள் குடியிருப்பதென்பதே அந்த இரகசியம். இதுவே கிறிஸ்துவின் மகிமையில் நாமும் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுக்கும் மகிமையான செல்வம். ஒவ்வொருவரையும் கிறிஸ்துவில் முழுமை பெற்றவர்களாக நிறுத்தும்படிக்கு, நாங்கள் எல்லோருக்கும் கிறிஸ்துவை அறிவித்து, எல்லா ஞானத்தோடும் புத்தி சொல்லி போதித்து வருகிறோம். இதற்காகவே, நான் எனக்குள் செயல்படுகிற அவருடைய ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடனும் போராடிப் பிரயாசப்படுகிறேன்.

கொலோசெயர் 1:25-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

கொலோசெயர் 1:25-29 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏனென்றால் தேவன் எனக்கு இந்தச் சிறப்புக்குரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பணி உங்களுக்கு உதவுகிறது. தேவனுடைய போதனையை முழுமையாய் கூறுவதுதான் என் பணி. இந்தப் போதனைதான் இரகசிய உண்மை. இது உலகம் படைக்கப்பட்ட காலம் முதல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது எல்லா மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருந்தது. இப்போது தேவனுடைய பரிசுத்தமான மக்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.

கொலோசெயர் 1:25-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.