பிரசங்கி 12:4-14

பிரசங்கி 12:4-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும், மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம், பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீவனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால்உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

பிரசங்கி 12:4-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டு அரைக்கும் சத்தம் குறைந்துபோக, பறவைகளின் சத்தத்திற்கும் உறக்கம் கலைக்க, இசைக்கும் மகளிரின் சத்தம் தொய்ந்து போகுமுன்னும் உன்னைப் படைத்தவரை நினை. மேடான இடங்களுக்கும், வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும், வாதுமை மரம் பூக்கும் முன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும், ஆசையும் அற்றுப்போகுமுன்னும், மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும் படைத்தவரை நினைவில்கொள். வெள்ளிக் கயிறு அறுந்து, தங்கக் கிண்ணம் உடைவதற்கு முன்னும், ஊற்றின் அருகே குடம் நொறுங்க, கிணற்றில் உள்ள கயிற்றுச் சக்கரம் உடைந்து போகுமுன்னும், மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி, ஆவி அதைக் கொடுத்தவரான இறைவனிடம் திரும்பும் முன் உன்னைப் படைத்தவரை நினைவிற்கொள். “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான். பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான். பிரசங்கி சரியான சொற்களையே கண்டுபிடிக்கத் தேடினான். அதினால் அவன் எழுதியவையெல்லாம் நேர்மையும் உண்மையுமானவை. ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன. என் மகனே, இவைகளினாலே எச்சரிப்பாயிருப்பாயாக. புத்தகங்களை எழுதுவது முடிவற்றது, மேலும் அதிக படிப்பு உடலை இளைக்கப்பண்ணும். எல்லாவற்றையும் கேட்டு, நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்: இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; மனிதனின் பிரதான கடமை இதுவே. ஏனெனில் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும், அந்தரங்கமான செயல்களுக்கும், நல்லதோ, தீயதோ இறைவனே நியாயத்தீர்ப்பு வழங்குவார்.

பிரசங்கி 12:4-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும், மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை. மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் மக்களுக்கு அறிவைப் போதித்து, கவனமாகக் கேட்டு ஆராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

பிரசங்கி 12:4-14 பரிசுத்த பைபிள் (TAERV)

உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது. நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப்போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள். நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால், கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள். உன் உடல் பூமியிலிருந்து வந்தது. நீ மரித்துப்போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும். ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது. நீ மரித்துப்போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும். இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார். பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக் கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார். ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை. என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும். இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.