நியாயாதிபதிகள் 12:5-6

நியாயாதிபதிகள் 12:5-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எப்பிராயீமுக்குப் போகும் யோர்தானிலுள்ள கடவு துறைகளையெல்லாம் கீலேயாத்தியர் கைப்பற்றினார்கள். எப்பிராயீமியரில் தப்பிய யாராவது நான் கடந்துபோக என்னை விடுங்கள் என கீலியாத்தியரிடம் கேட்டால், “நீ ஒரு எப்பிராயீமியனோ?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், “இல்லை” என பதிலளித்தால், “சரி, ‘சிபோலேத்’ என்று சொல்” என்பார்கள். அவனோ சரியாக உச்சரிக்க முடியாமல், “சிபோலேத்” என்று சொன்னால், அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள். அந்நாட்களில் நாற்பத்து இரண்டாயிரம் எப்பிராயீமியர் கொல்லப்பட்டனர்.

நியாயாதிபதிகள் 12:5-6 பரிசுத்த பைபிள் (TAERV)

கீலேயாத்தின் ஆட்கள் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கின்ற எல்லா பகுதிகளையும் கைப்பற்றினார்கள். அப்பகுதிகள் எப்பிராயீம் நாட்டிற்குச் செல்லும் வழியில் இருந்தன. எப்பிராயீமிலிருந்து ஓடிப்போனவன் நதிக்கு வந்து, “என்னை நதியைக் கடக்க விடுங்கள்” என்று சொன்னால் கீலேயாத்தின் மனிதர்கள், “நீ எப்பிராயீமைச் சேர்ந்தவனா?” என்று கேட்பார்கள். அவன் “இல்லை” என்று சொன்னால், அவர்கள், “‘ஷிபோலேத்’ என்று சொல்லு” என்பார்கள். எப்பிராயீம் மனிதரால் அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிக்க முடியாமல் அவர்கள் அதை, “சிபோலேத்” என்றனர். ஒருவன் “சிபோலேத்” என்று கூறினால் அவன் எப்பிராயீமைச் சேர்ந்தவன் என்று கண்டு, கீலேயாத் மனிதர்கள் நதியைக் கடக்கும் இடத்தில் அவனைக் கொன்றுவிடுவார்கள். எப்பிராயீம் ஆட்களில் 42,000 பேரை இவ்வாறு கொன்றார்கள்.

நியாயாதிபதிகள் 12:5-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கீலேயாத்தியர் எப்பிராயீமுக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.

நியாயாதிபதிகள் 12:5-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள்.