புலம்பல் 3:4-66
புலம்பல் 3:4-66 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார், என் எலும்புகளையும் உடைத்துவிட்டார். அவர், கசப்பும் கஷ்டமும் முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார். வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார். நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்; அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார். நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ, கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார். செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார். பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும், மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும், அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார். அவர் தம்முடைய வில்லை வளைத்து, தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார். அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார். நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள். அவர் என்னை கசப்பினால் நிரப்பி, காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார். அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார். நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன். ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.” நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன். நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று. ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு: அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை. உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது. நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.” யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர். எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக அமைதியாய் காத்திருப்பது நல்லது. இளைஞனாய் இருக்கும்போதே அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது. யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும். அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம். அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும். ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் என்றென்றும் கைவிடப்படுவதில்லை. அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது. அவர் துன்பத்தையோ துக்கத்தையோ மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை. நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம் கால்களின்கீழ் மிதிப்பதையும், ஒருவனின் மனித உரிமைகளை மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும், ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும் யெகோவா காணாதிருப்பாரோ? யெகோவா உத்தரவிடாவிட்டால், எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்? பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன. வாழ்கிற எந்த மனிதனும், தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்? ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், யெகோவாவிடம் திரும்புவோம். எங்கள் இருதயங்களையும், கைகளையும் பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி: “நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், நீர் எங்களை மன்னிக்கவில்லை. “நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர். மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால், மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது. நீர் எங்களை நாடுகளுக்குள் குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர். “எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், பாழும் அழிவும் வந்தன.” என் மக்கள் அழிக்கப்பட்டதனால் என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது. என் கண்கள் ஓய்வின்றி, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும். பரலோகத்திலிருந்து யெகோவா கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும். என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், என் ஆத்துமா துக்கிக்கிறது. காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள். அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்; வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன். யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன். “ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர். யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர். யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்! அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர். யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்; அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள். அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள். யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும். அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும். கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.
புலம்பல் 3:4-66 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார். அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார். ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார். நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார். நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார். வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார். தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார். நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன். கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார். அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார். என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர். யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக. நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார். அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை. ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும், உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும், மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக. நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர். தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள். பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது. மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது. என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது. காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள். படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள். தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர். ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர். யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும், எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர். அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.
புலம்பல் 3:4-66 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார். அவர் எனது எலும்புகளை உடைத்தார். கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார். அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார். அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார். நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார். கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார். என்னால் வெளியே வரமுடியவில்லை. அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார். நான் கதறினாலும் உதவி கேட்டாலும் கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை. அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார். அவர் எனது பாதையைக் கோணலாக்கினார். கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார். அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார். கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார். அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார். அவர் என்னை பாழாக்கினார். அவர் தனது வில்லை தயார் செய்தார். அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார். அவர் தனது அம்பை என்னுடைய வயிற்றில் எய்தார். நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன். நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள். கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார். அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார். கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார். அவர் என்னைத் தூசியில் தள்ளினார். நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன். நான் எனக்குள், “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன்” என்றேன். கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும். எனக்கு வீடு இல்லை. நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும். நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன். ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்: கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை. ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது! நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன். கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது. ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது. ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது. கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது, அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான். அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும். அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம். அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும். அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும். கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும். கர்த்தர் தண்டிக்கும்போது அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார். அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும் அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது. கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை. அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை. கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை. யாரோ ஒருவன் பூமியிலுள்ள அனைத்து சிறைக் கைதிகளையும் தன் காலுக்கடியில் நசுக்குவதை அவர் விரும்புவதில்லை. யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை. ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள். கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை. கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை. ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது, நிகழச் செய்யவும் முடியாது. உன்னதமான தேவனே நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார். ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது. நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம். பிறகு கர்த்தரிடம் திரும்புவோம். பரலோகத்தின் தேவனிடம் நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம். நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம். இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர். நீர் கோபத்தால் மூடப்பட்டு எங்களைத் துரத்தினீர். நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்! ஜெபம் எதுவும் வந்து சேராதபடி நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும் அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர். எங்களது பகைவர்கள் எல்லாம் எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள். நாங்கள் பயந்திருக்கிறோம். நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம். நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன். எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது! எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன். எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன! நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்! கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன. அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள். நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள். என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன். நீர் எனது சத்தத்தைக் கேட்டீர். நீர் உமது காதுகளை மூடவில்லை. நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை. நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர். “பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர். கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர். கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர். இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும். எனது பகைவர்கள் எவ்வாறு என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர். கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர். எல்லா நேரத்திலும் எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன. கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்! கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்! அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்! அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்! கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!
புலம்பல் 3:4-66 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார். அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார். பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார். நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார். நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார். வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார் என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப்பாழாக்கிவிட்டார். தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார். நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன். கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார். அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார். என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன். எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது. இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன். நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும், உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும், மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர். தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள். திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது. என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது. என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது. முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள். காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள். தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன். மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன். என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர். ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர். கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும். அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும், எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர். அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.