சங்கீதம் 23:1-6
சங்கீதம் 23:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது. அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார். அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார். தமது பெயருக்காக அவர் என்னை, நீதியின் பாதைகளில் நடத்துகிறார். மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே நான் நடந்தாலும் நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன், ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும், எனக்கு ஆறுதல் அளிக்கின்றன. என் பகைவர்களின் சமுகத்தில் நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும், நான் யெகோவாவினுடைய வீட்டில் என்றென்றுமாய் வாழ்வேன்.
சங்கீதம் 23:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
சங்கீதம் 23:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் என் மேய்ப்பர். எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும். அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார். குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார். அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார். அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார். மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன். ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர். உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும். கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர். என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும். நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
சங்கீதம் 23:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.