2 நாளாகமம் 3
3
எருசலேமின் ஆலயவேலை
1பின்பு சாலொமோன் எருசலேமிலுள்ள மோரியா மலையில் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். அங்குதான் அவனுடைய தகப்பன் தாவீதுக்கு யெகோவா காட்சியளித்திருந்தார். அந்த இடம் தாவீதினால் கொடுக்கப்பட்ட எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் இருந்தது. 2அவன் தனது அரசாட்சியின் நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் நாளில் கட்டட வேலையைத் தொடங்கினான்.
3சாலொமோன் அஸ்திபாரமிட்ட இறைவனுடைய ஆலயத்தின் நீளம் அறுபது முழமும், அகலம் இருபது முழமும் ஆகும். அவை பழைய அளவையின்படி இருந்தது. 4ஆலயத்தின் முன்மண்டபம் கட்டடத்தின் அகலப் பக்கத்தில் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது.
அதன் உட்புறம் முழுவதையும் அவன் சுத்த தங்கத்தகட்டால் மூடியிருந்தான். 5ஆலயத்தின் பிரதான மண்டபத்தை தேவதாரு பலகையால் மூடி அழகுபடுத்தி, அதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அதைப் பேரீச்சமர வடிவங்களாலும், சங்கிலி வடிவங்களாலும் அலங்கரித்தான். 6ஆலயத்தை விலையுயர்ந்த கற்களால் அலங்கரித்தான். அவன் பர்வாயீமின் தங்கத்தைப் பயன்படுத்தினான். 7உட்கூரை மரங்கள், கதவு நிலைகள், சுவர்கள், ஆலயத்தின் கதவுகள் ஆகியவற்றைத் தங்கத் தகட்டினால் மூடி, சுவர்களில் கேருபீன் உருவங்களையும் செதுக்கினான்.
8அவன் மகா பரிசுத்த இடத்தையும் கட்டினான். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தை ஒத்திருந்தது. நீளம் இருபது முழமும், அகலம் இருபது முழமுமாயிருந்தது. இவற்றை அறுநூறு தாலந்து சிறந்த தங்கத்தினால் மூடியிருந்தான். 9தங்கத்தினால் செய்யப்பட்ட ஆணிகள் ஐம்பது சேக்கல் எடையுள்ளன. மேல் பகுதிகளும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டிருந்தது.
10மகா பரிசுத்த இடத்தில் அவன் இரண்டு செதுக்கப்பட்ட கேருபீன்களை அமைத்து, அவற்றையும் தங்கத்தகட்டால் மூடினான். 11கேருபீன்களின் இறக்கைகளின் முழு நீளம் இருபது முழமாய் இருந்தது. முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், ஆலயத்தின் சுவரைத் தொடுவதாயும் இருந்தது. அதன் மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாய் இருந்தது. அதுவும் மற்ற கேருபீனின் சிறகை தொட்டபடி இருந்தது. 12இவ்வாறு இரண்டாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாக இருந்தது. அது ஆலயத்தின் மற்ற சுவரைத் தொட்டது. மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாயிருந்தது. அது முதலாவது கேருபீனின் சிறகை தொட்டுக்கொண்டிருந்தது. 13இந்த கேருபீன்களின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழமாய் நீண்டிருந்தன. அவை ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியபடி காலூன்றி நின்றன.
14சாலொமோன் நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், மென்பட்டினாலும் திரைச்சீலையைச் செய்து, அதில் கேருபீன்களின் உருவங்கள் தைக்கப்பட்டிருந்தன.
15ஆலயத்தின் முன்பகுதியில் அவன் இரண்டு தூண்களைச் செய்திருந்தான், அவை இரண்டும் சேர்ந்து ஒவ்வொன்றும் முப்பத்தைந்து முழ நீளமாயிருந்தன. அவற்றில் ஒவ்வொன்றின் உச்சியிலும் ஐந்துமுழ அளவுள்ள கும்பம் இருந்தது. 16பின்னப்பட்ட சங்கிலிகளைச் செய்து, அவற்றை அதன் தூண்களின் உச்சியில் வைத்தான். அதோடு நூறு மாதுளம்பழ வடிவங்களைச் செய்து அவற்றை சங்கிலியில் பிணைத்தான். 17அந்தத் தூண்களை ஆலயத்தின் முன்பகுதியில் தெற்குப் பக்கத்திற்கு ஒன்றும், வடக்குப் பக்கத்திற்கு ஒன்றுமாக நிறுத்தினான். தெற்கிலிருந்த தூணுக்கு யாகீன் என்றும், வடக்கிலிருந்த தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.
Currently Selected:
2 நாளாகமம் 3: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.