2 நாளாகமம் 4
4
ஆலயத்தின் அலங்காரப் பொருட்கள்
1சாலொமோன் இருபதுமுழ நீளம், முப்பதுமுழ அகலம், பத்துமுழ உயரமுடைய ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். 2அவன் வார்ப்பிக்கப்பட்ட உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. 3அதன் விளிம்பின் கீழ்ப்பகுதியில் ஒரு முழத்திற்கு பத்து காளைகளின் உருவங்கள் இருக்கும்படி சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன.
4வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன. 5தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 60,000 லிட்டர்#4:5 அதாவது, சுமார் 60,000 லிட்டர் என்பது மூல மொழியில் 3,000 பாத் என்றுள்ளது தண்ணீர் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
6அதன்பின் அவன், கழுவுவதற்காக பத்து தண்ணீர்த் தொட்டிகளையும் செய்து, ஐந்து தொட்டிகளை தெற்குப் பக்கத்திலும் ஐந்து தொட்டிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அவைகளிலேயே தகன காணிக்கைக்குரிய பொருட்கள் கழுவப்பட்டன. ஆனால் அந்தப் பெரிய தொட்டியோ ஆசாரியர்கள் கழுவுவதற்கென இருந்தது.
7அவன் பத்து தங்க விளக்குத் தாங்கிகளைக் குறிக்கப்பட்ட விதிப்படி செய்தான். அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான்.
8அவன் பத்து மேஜைகளையும் செய்து, அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். அத்துடன் தங்கத்தினால் நூறு தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான்.
9அவன் ஆசாரியருக்கான முற்றத்தையும், பெரிய முற்றத்தையும், அந்த முற்றங்களுக்குரிய கதவுகளையும் செய்து, கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினான். 10அவன் அந்தப் பெரிய தொட்டியைத் தெற்கு பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் வைத்தான்.
11அத்துடன் ஈராம் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான்.
இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, இறைவனின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்:
12இரண்டு தூண்கள்,
தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள்,
தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள்,
13தூண்களின் உச்சியில் இருக்கும் இரண்டு கிண்ண வடிவங்களான கும்பங்களை அலங்கரிக்க இரண்டு பின்னல் வேலைகளுக்கு நானூறு மாதுளம் பழங்கள்,
14தாங்கும் கால்களுடன் அதன் தொட்டிகள்;
15பெரிய தொட்டி, அதன் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகள்,
16பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், இறைச்சி குத்தும் முட்கரண்டிகள் இன்னும் தேவையான மற்றும் எல்லாப் பொருட்களுமே.
யெகோவாவினுடைய ஆலயத்தின் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் அபி என்பவன் அரசன் சாலொமோனுக்கு பளபளக்கும் வெண்கலத்தினால் செய்துமுடித்தான். 17இவை எல்லாவற்றையும் அரசன் சுக்கோத்துக்கும், சேரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தானின் சமபூமியில் களிமண் அச்சுகளில் வார்ப்பித்தான். 18இப்பொருட்களைச் செய்வதற்கு சாலொமோன் பயன்படுத்திய வெண்கலம் மிக அதிகமாய் இருந்தபடியால் அதன் எடை எவ்வளவு எனத் தீர்மானிக்கப்படவில்லை.
19அத்துடன் இன்னும் இறைவனின் ஆலயத்திலுள்ள பொருட்களை சாலொமோன் செய்தான். அவையாவன:
தங்க பலிபீடம்,
இறைசமுகத்து அப்பங்களை வைப்பதற்கான மேஜைகள்,
20உட்புற பரிசுத்த இடத்தின் முன்பகுதியில் நிர்ணயித்த முறைப்படி எரிப்பதற்கு, சுத்தத் தங்கத்தினாலான விளக்குத் தாங்கிகளுடன் அதன் விளக்குகள்,
21கட்டித் தங்கத்தினாலான பூ வேலைப்பாடுகள், அகல்விளக்குகள், இடுக்கிகள்.
22சுத்தத் தங்கத்தினாலான திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், அகப்பைகள், தூப கலசங்கள், ஆலயத்திற்கு தங்கக் கதவுகள், அதாவது மகா பரிசுத்த இடத்தின் உட்புறக் கதவுகள், பிரதான மண்டபத்தின் கதவுகள் ஆகியனவாகும்.
Currently Selected:
2 நாளாகமம் 4: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.