உபாகமம் 22
22
1உங்கள் அயலானுடைய எருதோ, செம்மறியாடோ வழிதவறிப்போவதைக் கண்டால், காணாததுபோல் இருக்கவேண்டாம். அதை உரியவனிடத்தில் கொண்டுபோய்விட நீங்கள் கவனமாயிருங்கள். 2அந்த அயலவன் உங்களுக்கு அருகில் குடியிராவிட்டாலோ, அவன் யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலோ அவன் அதைத் தேடிவரும்வரை அதை உங்கள் வீட்டில் கொண்டுபோய் வைத்திருந்து, அவனிடம் திருப்பிக்கொடுங்கள். 3உங்கள் அயலான் தனது கழுதையையோ, மேலங்கியையோ அல்லது வேறு பொருளையோ தொலைத்திருக்க நீங்கள் அதைக் கண்டெடுத்தால், இவ்வாறே செய்யவேண்டும். அதைத் திருப்பிக் கொடுக்காதிருக்கவேண்டாம்.
4உங்கள் அயலானுடைய கழுதையோ, மாடோ வீதியில் விழுந்து கிடப்பதைக் கண்டால், அதைக் காணாததுபோல் இருக்கவேண்டாம். அந்த மிருகத்தைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய்யுங்கள்.
5ஒரு பெண், ஆண்களின் உடையையோ ஒரு ஆண், பெண்களின் உடையையோ உடுத்தக்கூடாது. ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா இதைச் செய்பவர்களை அருவருக்கிறார்.
6வழியருகிலாவது, மரத்திலாவது, தரையிலாவது தாய்க் குருவி ஒன்று முட்டைகளோடு அல்லது குஞ்சுகளோடு ஒரு கூட்டில் இருப்பதை நீங்கள் கண்டால், தாய்க் குருவியை குஞ்சுகளோடு எடுக்காதீர்கள். 7நீங்கள் குஞ்சுகளை எடுக்கலாம், ஆனால் தாய்க் குருவியை போகவிட கவனமாயிருங்கள், அப்படிச் செய்தால் நீங்கள் நலமாயிருந்து நீடித்து வாழ்வீர்கள்.
8நீங்கள் புதிய வீடு கட்டும்பொழுது கூரையிலிருந்து யாரும் விழாதபடி, கூரையைச் சுற்றி சிறிய கைச்சுவரைக் கட்டுங்கள். ஏனெனில், யாரேனும் கூரையிலிருந்து விழுந்தால், நீங்கள் அந்த வீட்டின்மேல் இரத்தப்பழி சுமராதிருக்கச்செய்வீர்கள்.
9உங்கள் திராட்சைத் தோட்டத்தில் இரண்டு வகையான விதைகளை நடவேண்டாம்; அப்படிச் செய்தால் நீங்கள், நட்டவைகளின் பயிர்கள் மட்டுமல்ல திராட்சைத் தோட்டத்தின் பலனும் தீட்டுப்படும்.#22:9 அல்லது இரண்டும் பரிசுத்த இடத்திற்கு கொண்டுபோகப்படும்
10மாட்டையும், கழுதையையும் ஒரே நுகத்தில் பூட்டி உழவேண்டாம்.
11கம்பளி நூலும், மென்பட்டு நூலும் சேர்த்து நெய்யப்பட்ட துணியினாலான உடையை உடுத்தவேண்டாம்.
12நீங்கள் உடுத்தும் உங்கள் மேலங்கியின் நான்கு முனைகளிலும் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள்.
திருமண முறைகேடுகள்
13ஒருவன் ஒரு மனைவியை எடுத்து, அவளுடன் உறவுகொண்டபின் அவளை வெறுத்து, 14“நான் அவளுடன் சேர்ந்தபொழுது அவளுடைய கன்னித்தன்மைக்கான அத்தாட்சியை அவளில் காணவில்லை” என்று சொல்லி, அவளைத் தூஷித்து, அவளுக்கு ஒரு கெட்டபெயர் வரப்பண்ணக்கூடும். 15அப்பொழுது அவளுடைய தகப்பனும் தாயும் அவள் கன்னித்தன்மை உடையவள் என்ற அத்தாட்சியை பட்டண வாசலில் இருக்கும் சபைத்தலைவர்களிடம் கொண்டுவர வேண்டும். 16அவளின் தகப்பன் சபைத்தலைவர்களிடம், “என் மகளை இவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தேன்; அவனோ அவளை வெறுக்கிறான். 17அவன் இப்போது அவளைத் தூஷித்து, உன்னுடைய மகளைக் கன்னியாக நான் காணவில்லை என்று சொல்கிறான். அவளது கன்னித்தன்மையின் அத்தாட்சி இங்கே இருக்கிறது” என்று சொல்லவேண்டும். பின்பு அவளுடைய பெற்றோர், பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் அந்த துணியை விரித்துக் காட்டவேண்டும். 18அப்பொழுது பட்டணத்து சபைத்தலைவர்கள் அந்த மனிதனைப்பிடித்து, அவனைத் தண்டிக்கவேண்டும். 19அவர்கள் அவனுக்கு நூறு சேக்கல் வெள்ளி அபராதம் விதித்து, அதைப் பெண்ணின் தகப்பனிடம் கொடுக்கவேண்டும். ஏனெனில் அந்த மனிதன் ஒரு இஸ்ரயேலில் கன்னிப்பெண்ணிற்கு கெட்டபெயரை உண்டாக்கியிருக்கிறான். அவள் தொடர்ந்து அவன் மனைவியாக இருக்கவேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்துசெய்தல் கூடாது.
20ஆனாலும் அக்குற்றச்சாட்டு உண்மையாயிருந்து, அவளின் கன்னித்தன்மைக்கான அத்தாட்சி காட்டப்படாதிருந்தால், 21அந்தப் பெண்ணை அவள் தகப்பன் வீட்டு வாசலில் கொண்டுவர வேண்டும். அப்பொழுது அந்த பட்டணத்தில் உள்ள ஆண்கள் அவள்மேல் கல்லெறிந்து அவளைக் கொல்லவேண்டும். ஏனெனில் தன் தகப்பன் வீட்டில் அவள் இருக்கும்போது, அவள் மானக்கேடாக நடந்து, இஸ்ரயேலில் ஒரு இழிவான செயலைச் செய்திருக்கிறாள். இப்படியாக உங்கள் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
22ஒருவன் வேறு ஒருவனின் மனைவியுடன் உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், அவளுடன் உறவுகொண்ட மனிதனும், அந்த பெண்ணுமாகிய இருவருமே சாகவேண்டும். இப்படியாக இஸ்ரயேலின் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
23ஒரு கன்னிப்பெண்ணை ஒருவனுக்கென்று நியமித்தபின், வேறொருவன் பட்டணத்தில் அவளைக் கண்டு, அவளுடன் உறவுகொண்டால், 24நீங்கள் அவர்கள் இருவரையும் பட்டணத்து வாசலுக்குக் கொண்டுவந்து, அவர்கள்மேல் கல்லெறிந்து அவர்களைக் கொல்லவேண்டும். ஏனெனில், அவள் பட்டணத்திலிருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாதபடியால் அவளையும், அவன் வேறொருவனது மனைவியை மானபங்கப்படுத்தினபடியால் அவனையும் கொல்லவேண்டும். இப்படியாக உங்கள் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
25ஆனால் வேறொருவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த ஒரு பெண்ணை நாட்டுப்புறத்தில் கண்டு, ஒருவன் அவளைக் கற்பழித்தால், அதைச் செய்த அம்மனிதன் மட்டுமே சாகவேண்டும். 26அவளுக்கு ஒன்றும் செய்யவேண்டாம். அவள் மரணத்துக்குரிய பாவம் ஒன்றையும் செய்யவில்லை. இந்த செயல் ஒருவன் தன் அயலானைத் தாக்கிக் கொலைசெய்தது போன்றதாகும், 27அவன் அவளை புறம்பான ஒரு தனி இடத்திலே கண்டு அதைச் செய்தான். விவாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட அப்பெண் கூக்குரலிட்டிருந்தும் அவளைக் காப்பாற்ற ஒருவரும் இருக்கவில்லை.
28ஆனால் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் வெளியிலே கண்டு, அவளைக் கற்பழித்தது, கண்டுபிடிக்கப்பட்டால், 29அவன் அவளுடைய தகப்பனுக்கு ஐம்பது சேக்கல் வெள்ளியைக் கொடுக்கவேண்டும். அவன் அவளை பலாத்காரமாய் கற்பழித்தபடியால், அவளைத் திருமணம் செய்யவேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் அவளை விவாகரத்து செய்யமுடியாது.
30ஒருவன் தன் தகப்பனின் மனைவியை#22:30 அவரது தந்தையின் பல மனைவிகளில் ஒருவர். திருமணம் செய்யக்கூடாது; அவன் தன் தகப்பனை அவமதிக்கக்கூடாது.
Currently Selected:
உபாகமம் 22: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.