யாத்திராகமம் 5
5
வைக்கோல் இல்லாமல் செங்கற்கள்
1அதன்பின் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போகவிடு என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள்.
2அதற்குப் பார்வோன், “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களைப் போகவிட அவர் யார்? எனக்கு யெகோவாவைத் தெரியாது, நான் இஸ்ரயேலரைப் போகவிடமாட்டேன்” என்றான்.
3அப்பொழுது அவர்கள், “எபிரெயரின் இறைவன் எங்களைச் சந்தித்திருக்கிறார். இப்பொழுது நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்து, இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிசெலுத்தும்படி எங்களைப் போகவிடும். இல்லாவிட்டால் கொள்ளைநோயினாலோ வாளினாலோ அவர் எங்களைத் தண்டிப்பார்” என்றார்கள்.
4அதற்கு எகிப்தின் அரசன், “மோசே, ஆரோன் நீங்கள் ஏன் மக்களை வேலைசெய்வதிலிருந்து குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைக்குத் திரும்பிப்போங்கள்!” என்றான். 5மேலும் பார்வோன், “பாருங்கள், இப்பொழுது இந்த நாட்டில் உங்கள் மக்கள் பெருகியிருக்கிறார்கள்; அப்படியிருக்க நீங்கள் அவர்கள் வேலைசெய்வதைத் தடுக்கிறீர்களே!” என்றான்.
6அன்றைய தினமே பார்வோன், அடிமைகளை நடத்தும் கண்காணிகளிடமும், மக்களுக்குப் பொறுப்பாயிருந்த தலைவர்களிடமும் கொடுத்த உத்தரவு இதுவே: 7“நீங்கள் இனிமேல் செங்கல் சுடுவதற்கு மக்களுக்கு வைக்கோல் கொடுக்கக்கூடாது; அவர்களே போய் வைக்கோலைச் சேகரித்து வரட்டும். 8ஆனால் நீங்கள் அவர்களிடம் முன்பு செய்த அளவு செங்கற்களைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளுங்கள்; அந்த அளவைக் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகள்; அதனால்தான் அவர்கள், ‘நாங்கள் போய் எங்கள் இறைவனுக்குப் பலிசெலுத்த அனுமதியும்’ என்று கூக்குரலிடுகிறார்கள். 9அந்த மனிதர்கள் தொடர்ந்து வேலைசெய்யும்படிக்கும், பொய்களை நம்பாதபடிக்கும் அவர்களுடைய வேலையை இன்னும் கடினமாக்குங்கள்.”
10அப்பொழுது அடிமைகளை நடத்தும் கண்காணிகளும், தலைவர்களும் மக்களிடம்போய், “பார்வோன், ‘இனிமேல் வைக்கோல் கொடுக்கமாட்டேன். 11நீங்களே வைக்கோல் கிடைக்கும் இடங்களுக்குப் போய், உங்களுக்கான வைக்கோலை எங்கேயாவது தேடிக்கொள்ளுங்கள்; ஆனாலும் உங்கள் வேலை கொஞ்சமும் குறைக்கப்படமாட்டாது’ என்று சொல்கிறான்” என்றார்கள். 12எனவே மக்கள் வைக்கோலுக்குப் பதிலாக வயலில் விடப்பட்ட பயிரின் அடித்தாழ்களை சேகரிப்பதற்கு எகிப்து முழுவதும் சிதறிப்போனார்கள். 13அடிமை நடத்தும் அதிகாரிகள் அவர்களிடம், “வைக்கோல் இருக்கும்போது செய்ததுபோலவே, ஒவ்வொரு நாளுக்கும் குறிக்கப்பட்ட அளவின்படியே வேலைசெய்யவேண்டும்” என வற்புறுத்தினார்கள். 14தலைவர்களாய் இருந்த இஸ்ரயேலரை, அடிமைகளை நடத்தும் பார்வோனின் கண்காணிகள் அடித்து, “நீங்கள் ஏன் உங்களுக்குக் குறித்த செங்கற்களை முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் செய்யவில்லை” என்றும் கேட்டார்கள்.
15அப்பொழுது இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் பார்வோனிடம் சென்று, “நீங்கள் ஏன் உங்கள் பணியாளர்களான எங்களை இவ்விதமாய் நடத்துகிறீர்கள்? 16உமது பணியாளர்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படவில்லை; அப்படியிருந்தும் செங்கல் சுடும்படி கேட்கப்பட்டு உங்கள் பணியாளர்களால் அடிக்கப்படுகிறோம்; ஆனால், குற்றம் உமது சொந்த மக்களிலேயே இருக்கிறது” என்றார்கள்.
17அதற்குப் பார்வோன், “சோம்பேறிகளே, நீங்கள் சோம்பேறிகளாய் இருப்பதனால்தான், ‘நாங்கள் போய் யெகோவாவுக்குப் பலியிட எங்களை விடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். 18இப்பொழுதே வேலைக்குப் போங்கள். உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படமாட்டாது, ஆனாலும் நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட முழு எண்ணிக்கையின்படி செங்கற்களைச் செய்தே ஆகவேண்டும்” என்றான்.
19“ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய செங்கற்களின் எண்ணிக்கையை நீங்கள் குறைக்கக்கூடாது” என்று இஸ்ரயேல் மக்களின் தலைவர்களுக்குச் சொல்லப்பட்டபோது, தாம் பெரும் பிரச்சனைக்கு உட்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். 20அவர்கள் பார்வோனிடம் இருந்து திரும்பி வரும்போது, மோசேயும் ஆரோனும் தங்களைச் சந்திக்கக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். 21அப்பொழுது அவர்கள் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “யெகோவாவே உங்களைப் பார்த்து நியாயந்தீர்ப்பாராக! நீங்கள் எங்களைப் பார்வோனுக்கும், அவனுடைய அலுவலர்களுக்கும் அருவருப்பானவர்களாக்கி, எங்களைக் கொல்லும்படி அவர்களின் கைகளில் வாளையும் கொடுத்திருக்கிறீர்கள்” என்றார்கள்.
இறைவன் விடுதலையை வாக்களித்தல்
22மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய், “யெகோவாவே, இந்த மக்கள்மேல் ஏன் பிரச்சனையைக் கொண்டுவந்திருக்கிறீர்? இதற்காகவா என்னை அனுப்பினீர்? 23பார்வோனிடம் சென்று உம்முடைய பெயரைச் சொல்லிப் பேசியதுமுதல், அவன் இந்த மக்கள்மேல் தொல்லையையே கொண்டுவந்திருக்கிறான். நீர் உமது மக்களை எவ்விதத்திலும் விடுதலையாக்கவில்லையே” என்றான்.
Currently Selected:
யாத்திராகமம் 5: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.