YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 13

13
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
1ஆமோத்சின் குமாரனான ஏசாயாவுக்கு தேவன் பாபிலோன்பற்றிய சோகச் செய்தியைக் காட்டினார்.
2தேவன், “எதுவும் வளராத அந்த இடத்தில், மலை மீது கொடியை ஏற்றுங்கள்.
அந்த மனிதர்களை அழையுங்கள்.
உங்கள் கைகளை அசையுங்கள்.
அவர்கள் முக்கியமானவர்களுடைய வாசல்களில் நுழையும்படி கூறுங்கள்!” என்றார்.
3தேவன்: “நான் அவர்களை ஜனங்களிடமிருந்து பிரித்திருக்கிறேன்.
நானே அவர்களுக்கு ஆணையிடுவேன்.
நான் கோபமாக இருக்கிறேன்.
ஜனங்களைத் தண்டிக்க எனது மிகச் சிறந்தவர்களை கூட்டிச்சேர்த்தேன். மகிழ்ச்சியுள்ள இவர்களைப்பற்றி பெருமிதமடைகிறேன்!
4மலைகளில் உரத்த சத்தம் உள்ளது.
அச்சத்தத்தை கவனியுங்கள்! அது பல மனிதர்களின் சத்தம் போலுள்ளது.
பல அரசாங்கங்களிலிருந்து ஜனங்கள் அங்கு கூடியிருக்கின்றார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் படைகளைக் கூட்டியிருக்கிறார்.
5கர்த்தரும் அவரது படைகளும் தூர நாடுகளிலிருந்து வந்துள்ளனர்.
அவர்கள் பூமியின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வருகிறார்கள்.
கர்த்தர் தன் கோபத்தைக் காட்ட இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
இந்தப் படை முழு நாட்டையும் அழிக்கும்” என்றார்.
6கர்த்தருடைய விசேஷ நாள் நெருங்குகிறது. எனவே அழுங்கள். உங்களுக்காகச் சோகமாக இருங்கள். பகைவர்கள் உங்கள் செல்வங்களைப் பறிக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் இதனை நிறைவேற்றுவார். 7ஜனங்கள் தம் தைரியத்தை இழப்பார்கள். ஜனங்களை அச்சம் பெலவீனப்படுத்தும்.
8ஒவ்வொருவரும் அஞ்சுவார்கள். இந்த அச்சம் அவர்களின் வயிற்றில் பிரசவ வேதனைபோன்ற துன்பத்தைத் தரும். அவர்களின் முகங்கள் நெருப்பைப்போன்று சிவக்கும். ஒருவரையொருவர் பார்த்து பிரமித்துப்போவார்கள். காரணம் எல்லாருடைய முகங்களிலும் அச்சம் நிரம்பியிருக்கும்.
பாபிலோனுக்கு எதிரான தேவனுடைய தீர்ப்பு
9பார்! கர்த்தருடைய விசேஷ நாள் வருகிறது! இது பயங்கரமான நாள். தேவன் மிகவும் கோபம் அடைந்து, நாட்டினை அழிப்பார். பாவம் செய்த அனைவரையும் தேவன் அழித்துப்போடுவார். 10வானம் இருட்டாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒளி வீசாது.
11தேவன் கூறுகிறார்: “உலகத்திற்கு கேடு ஏற்பட நான் காரணமாக இருப்பேன். கெட்டவர்களை அவர்களது பாவத்துக்காகத் தண்டிப்பேன். ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை விடும்படி செய்வேன். மற்றவர்களுக்கு அற்பமாகத் தெரியும்படி செயல்புரிகிறவர்களின் வாயாட்டத்தை நான் தடுப்பேன். 12கொஞ்சம்பேர் மட்டுமே விடுபடுவார்கள். அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். தங்கத்தைப்போன்று அரிதாக இருப்பார்கள். இவர்கள் சுத்தமான தங்கத்தைவிட விலைமதிப்புள்ளவர்கள். 13எனது கோபத்தால் வானத்தை நடுங்கவைப்பேன். பூமி தன் இடத்திலிருந்து நகரும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் கோபத்தைக் காட்டும் நாளில் இவை அனைத்தும் நிறைவேறும். 14பிறகு, காயம்பட்ட மானைப்போல, பாபிலோனை விட்டு ஜனங்கள் ஓடுவார்கள். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல, அவர்கள் ஓடுவார்கள். ஒவ்வொருவரும் திரும்பி தங்கள் சொந்த நாட்டிற்கும் ஜனங்களிடமும் ஓடுவார்கள். 15ஆனால் பாபிலோனிய ஜனங்களைப் பகைவர்கள் துரத்துவார்கள். பகைவன் ஒருவனைப் பிடிக்கும்போது, அவனை வாளால் கொல்வான். 16அவர்களது வீடுகளிலுள்ள அனைத்தும் களவாடப்படும். அவர்களின் மனைவிகள் கற்பழிக்கப்படுவார்கள். அவர்களின் சிறிய குழந்தைகள், ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அடித்துக் கொல்லப்படுவார்கள். 17தேவன் கூறுகிறார்: “கவனி, மீதியானியப் படைகள் பாபிலோனைத் தாக்க நான் காரணமாக இருப்பேன். மீதியானியப் படைகளுக்குப் பொன்னும், வெள்ளியும் கொடுத்தாலும்கூட தங்கள் தாக்குதலை நிறுத்தாது. 18பாபிலோனிலுள்ள இளைஞர்களைப் படை வீரர்கள் தாக்கிக் கொல்வார்கள். படை வீரர்கள் குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். படை வீரர்கள் சிறு பிள்ளைகளிடமும் தயவோடு இருக்கமாட்டார்கள். பாபிலோன் அழிக்கப்படும். அது சோதோம் கொமோரா ஆகியவற்றின் அழிவைப்போல் இருக்கும். தேவன் இந்த அழிவுக்குக் காரணமாக இருப்பார். எதுவும் விடுபடாது. 19எல்லா இராஜ்யங்களையும்விட பாபிலோன் மிகவும் அழகானது. பாபிலோனிய ஜனங்கள் தமது நகரத்தைப்பற்றிப் பெருமையோடு இருக்கிறார்கள். 20ஆனால் தொடர்ந்து பாபிலோன் அழகுடையதாக இருக்காது. வருங்காலத்தில் அங்கு ஜனங்கள் தொடர்ந்து வாழமாட்டார்கள். அரேபியர்கள் அங்கே தமது கூடாரங்களை அமைக்கமாட்டார்கள். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவரமாட்டார்கள். 21அங்கே வனாந்திரத்திலுள்ள காட்டு மிருகங்கள் மட்டுமே வாழும். பாபிலோனின் வீடுகளில் ஜனங்கள் வசிக்கமாட்டார்கள். வீடு முழுவதும் ஆந்தைகளும், பெரிய பறவைகளும் வசிக்கும். காட்டு ஆடுகள் வீடுகளில் விளையாடும். 22காட்டு நாய்களும், நரிகளும் பாபிலோனில் மிகப்பெரிய அழகான கட்டிடங்களில் ஊளையிடும். பாபிலோன் அழியும். பாபிலோனின் முடிவு அருகிலுள்ளது. பாபிலோனின் அழிவை நான் தாமதமாக்க விடமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 13