1 சாமு 17
17
அத்தியாயம் 17
இஸ்ரவேலர்களுக்குக் கோலியாத்தின் சவால்
1பெலிஸ்தர்கள் யுத்தம் செய்வதற்குத் தங்கள் இராணுவங்களைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றாகக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே முகாமிட்டார்கள். 2சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். 3பெலிஸ்தர்கள் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர்கள் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது. 4அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம். 5அவன் தன்னுடைய தலையின்மேல் வெண்கல கவசத்தைப் போட்டு, ஒரு போர்க்கவசம் அணிந்திருப்பான்; அந்தக் கவசத்தின் எடை ஐயாயிரம் சேக்கல் வெண்கலமாக இருக்கும். 6அவன் தன்னுடைய கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன்னுடைய தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் அணிந்திருப்பான். 7அவனுடைய ஈட்டியின் தாங்குக்கோல் நெசவுக்காரர்களின் தறிமரத்தின் அடர்த்தியாகவும் அவன் ஈட்டியின் முனை அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; கேடகம் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான். 8அவன் வந்து நின்று, இஸ்ரவேல் இராணுவங்களைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் ஊழியக்காரர்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும். 9அவன் என்னோடே யுத்தம்செய்யவும் என்னைக் கொல்லவும் திறமையுள்ளவனாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரர்களாக இருந்து, எங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று சொல்லி, 10பின்னும் அந்தப் பெலிஸ்தியன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய இராணுவங்களுக்கு சவால் விட்டேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்செய்ய ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான். 11சவுலும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.
தாவீது போருக்குச் செல்லுதல்
12தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானான ஈசாய் என்னும் பெயருள்ள எப்பிராத்திய மனிதனுடைய மகனாக இருந்தான்; ஈசாய்க்கு எட்டு மகன்கள் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற மக்களுக்குள்ளே வயது முதிர்ந்த கிழவனாக மதிக்கப்பட்டான். 13ஈசாயினுடைய மூன்று மூத்த மகன்கள் சவுலோடு யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று மகன்களில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாம் மகனுக்கு அபினதாப் என்றும், மூன்றாம் மகனுக்கு சம்மா என்றும் பெயர். 14தாவீது எல்லோருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடுப் போயிருந்தார்கள். 15தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப்போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். 16அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாட்கள் வந்துவந்து நிற்பான். 17ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால்#17:17 10 கிலோ வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய், 18இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான். 19அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர்கள் எல்லோரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்துக்கொண்டிருந்தார்கள். 20தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; இராணுவங்கள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். 21இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள். 22அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, பொருட்களை காக்கிறவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, இராணுவங்களுக்குள் ஓடி, தன் சகோதரர்களைப்பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். 23அவன் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் பெலிஸ்தர்களின் இராணுவங்களிலிருந்து எழும்பிவந்து நின்று, முன்பு சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான். 24இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்திற்கு விலகி ஓடிப்போவார்கள். 25அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள். 26அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான். 27அதற்கு மக்கள்: அவனைக் கொல்கிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். 28அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். 29அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு காரணம் இல்லையா என்று சொல்லி, 30அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள். 31தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலினிடம் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைத்தான். 32தாவீது சவுலை பார்த்து: இவனால் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்செய்வேன் என்றான். 33அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்செய்ய உன்னால் முடியாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான். 34தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. 35நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன். 36அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான். 37பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, யெகோவா உன்னுடன் இருப்பாராக என்றான். 38சவுல் தாவீதுக்குத் தன் உடைகளை அணிவித்து வெண்கலமான ஒரு கவசத்தை அவனுடைய தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் அணிவித்தான். 39அவனுடைய பட்டயத்தை தாவீது தன் உடைகளின்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகமுடியாது; இந்த பழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, 40தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பர்களுக்குரிய தன்னுடைய பையிலே போட்டு, தன்னுடைய கவணைத் தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனின் அருகில் போனான்.
தாவீது கோலியாத்தைக் கொல்லுதல்
41பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். 42பெலிஸ்தியன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் அழகுமான சிவந்த மேனியுள்ளவனுமாக இருந்தபடியால், அவனை இழிவாகக் கருதினான். 43பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். 44பின்னும் அந்தப் பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன்னுடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். 45அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். 46இன்றையதினம் யெகோவா உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள். 47யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 48அப்பொழுது அந்தப் பெலிஸ்தியன் எழும்பி, தாவீதுக்கு எதிராக நெருங்கி வரும்போது, தாவீது விரைவாக அந்த இராணுவத்திற்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, 49தன்னுடைய கையை பையிலே விட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். 50இப்படியாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனைத் தோற்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லை. 51எனவே, தாவீது பெலிஸ்தியனின் அருகே ஓடி அவன்மேல் நின்று, அவனுடைய பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவனுடைய தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர்கள் கண்டு, ஓடிப்போனார்கள். 52அப்பொழுது இஸ்ரவேலர்களும் யூதா மனிதர்களும் எழுந்து, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைவரை, எக்ரோனின் வாசல்கள்வரை, பெலிஸ்தர்களைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணம் வரை, எக்ரோன் பட்டணம் வரை, பெலிஸ்தர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். 53இஸ்ரவேல் மக்கள் பெலிஸ்தர்களை துரத்தின பின்பு, திரும்பி வந்து, அவர்களுடைய முகாம்களைக் கொள்ளையிட்டார்கள். 54தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன்னுடைய கூடாரத்திலே வைத்தான். 55தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதை சவுல் கண்டபோது, அவன் சேனாதிபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 56அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான். 57தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பும்போது, அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவனுடைய கையில் இருந்தது. 58அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாக இருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 சாமு 17: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.