2 கொரி 11
11
அத்தியாயம் 11
பவுலும் கள்ள அப்போஸ்தலர்களும்
1என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. 2நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 3ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன். 4எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே. 5மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன். 6நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே. 7நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ? 8உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். 9நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன். 10அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். 11இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார். 12மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். 13அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். 14அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. 15எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.
பவுல் தன்னுடைய உபத்திரவத்தைக்குறித்து மேன்மைபாராட்டல்
16பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள். 17இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். 18அநேகர் சரீரத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டிக்கொள்ளும்போது, நானும் மேன்மைபாராட்டுவேன். 19நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே. 20ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. 21நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன். 22அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான். 23அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன். 24யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்; 25மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன். 26அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்; 27பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். 28இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது. 29ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ? 30நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். 31என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். 32தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்; 33அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 கொரி 11: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.