என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும்,
என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும்,
என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும்,
என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.
துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;
அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன்.
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்,
என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய்,
அவர் காதுகளில் விழுந்தது.
அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது,
மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று,
அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது;
அதனால் தழல் மூண்டது.
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்;
அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்;
காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.
இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்;
தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள்,
கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
யெகோவா வானங்களிலே குமுறினார்,
உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்;
கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
தம்முடைய அம்புகளை எய்து,
அவர்களைச் சிதறடித்தார்;
மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார்.
அப்பொழுது யெகோவாவே,
உம்முடைய கண்டிப்பினாலும்
உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன,
உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து,
பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும்
என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்;
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,
விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து,
என்னைத் தப்புவித்தார்.
யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்;
என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்;
நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன;
அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து,
என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும்,
தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற
என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.